வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 69
“இல்லை. நான் சிறு பையனாயிருந்தபோதுதான் இவைகள் தலை காட்டின. என்னுடைய பாட்டனார் இவற்றின் பெயர்களைக் கூடக் கேட்டதில்லை. அந்தக் காலத்திலே கல், எலும்பு, கொம்பு, மரம் இவைகளைக் கொண்டுதான் எல்லா ஆயுதங்களையும் செய்து கொள்வார்கள்.”
“மரங்களை எப்படி வெட்டுவார்கள்?”
“கல்லால் செய்த கோடாரியால்.”
ரொம்ப நேரமும் செல்லும்; நன்றாகவும் வெட்ட முடியாதே?”
“எதை எடுத்தாலும் அவசரம். இந்த அவசரப் புத்தி தானே நம்மைச்
சீரழித்துவிட்டது. அறுத்துப் போட்டால் இரண்டு மாதங்களுக்குச் சாப்பிடலாம். ஏறிச் சவாரி செய்வதாயிருந்தால் வாழ்க்கை பூராவுக்கும் போதும். அப்படிப் பட்ட ஒரு குதிரையைக் கொடுத்துவிட்டு ஒரு தாமிரக் கோடாரி வாங்கி விடுகிறார்கள். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வதாம்? காடுகளிலுள்ள மரங்களை வெட்டிச் சாய்க்கலாம்; கிராமம் கிராமமாக ஜனங்களை வதை செய்து குவிக்கலாம். காட்டிலுள்ள மரங்கள்தான் மௌனமாயிருக்கும். ஒரு கிராம ஜனங்களுமா மௌனமாய் இருப்பார்கள்? அவர்களும் இந்த மாதிரிக் கோடரியைத் தூக்குவார்கள். இந்த ஆயுதங்கள் வந்துதான் யுத்தத்தை இன்னும் கொடுமையானதாய்ச் செய்து விட்டன. இந்த ஆயுதங்கள் பட்ட காயங்களில் விஷம் உண்டாகிறது. அந்தக் காலத்தில் கல்லிலே செய்யப்பட்ட பாணங்களை உபயோகித்தார்கள். இவைகளைப் போல் அந்தப் பாணங்கள் கூர்மையாய் இருக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும் நல்ல பலவானுடைய கையிலிருந்து விடப்பட்ட கல் பாணங்கள் நல்ல வேலையையே செய்தன. இப்பொழுது இந்தத் தாமிர ஆயுதங்கள் தலை விரித்தாடும் இந்தக் காலத்தில் பால்குடி மாறாத குழந்தை கூடப் புலி வேட்டையாட நினைக்கிறது! இக் காலத்தில் யார்தான் வில் வித்தையில் நிபுணனாகப் பிரியப்படுவான்?”
“தாத்தா! நான் தங்களுடைய ஒரு வாக்கியத்தை ரொம்ப ரசிக்கிறேன். ‘மனிதன் ஒரே இடத்திலேயே இருப்பதற்காகப் படைக்கப்படவில்லை’ என்ற இந்த வாக்கியம் உபதேசம் மாதிரி என் மனதைக் கவர்கிறது.”
“குழந்தாய்! முதல் நாள் கழித்த அதே இடத்தில் அடுத்த அடுத்த நாட்களிலும் மலஜலம் கழித்தால் அது எவ்வளவு அசுத்தமாயிருக்கும்? இந்தச் சமயம் எங்களுடைய குடிசைகள் இங்கு இருக்கின்றன. இங்குள்ள புற்களை எங்கள் கால்நடைகள் மேய்கின்றன. புற்கள் தீர்ந்து எங்கள் குடிசைகளைச் சுற்றி மலஜலங்கள் காட்சியளிக்கத் தொடங்கிவிட்டால், இந்த வனத்தைவிட்டு நாங்கள் வேறு இடத்திற்குச் சென்று விடுவோம். அந்தப் புதிய வனத்தில் புற்களும் ஏராளமாயிருக்கும். பூமி, தண்ணீர், காற்று இவைகளும் எவ்வளவு பரிசுத்தமாயிருக்கும் தெரியுமா!”
“ஆம், தாத்தா! இப்படிப்பட்ட பூமியைத்தான் நானும் விரும்புகிறேன். அந்த நிர்மலமான வனத்திலே தான் என்னுடைய குழல் இனிமையான கானத்தை எழுப்பும்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 69, புத்தகங்கள், ஆயுதங்கள், பக்கம், காலத்தில், வால்காவிலிருந்து, கங்கை, செய்து, பாணங்கள், அடுத்த, எங்கள், எவ்வளவு, அந்தப், நல்ல, ரொம்ப, சிறந்த, நான், என்னுடைய, அந்தக், பட்ட