வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 48
அன்று மாலை நேரத்தில் இந்தச் சமூகத்தின் தலைவனுடைய வீட்டு முன்னாலுள்ள முற்றத்தில், அந்தக் கிராமத்து ஆண்களும் பெண்களும் கூடியிருந்தனர். மது, மாட்டு மாமிசம், குதிரை மாமிசம் முதலிய பொருள்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சமூகத் தலைவன், புத்திரோற்பத்திக்காக விழாக் கொண்டாடிக் கொண்டிருந்தான். இங்கே சோமாவினுடைய வீட்டில் கிரிச்ராஸ்வன் மதியிழந்து விழுந்து கிடக்கிறான். ஆகையால் அவனுக்காகச் சோமாவும் திருஜ்ராஸ்வனும் அந்த விழாவுக்குச் சென்றனர். நடுநிசி வரை குடிப்பதும், புசிப்பதும், பாடுவதும், ஆடுவதுமாக ஒரே களியாட்டத்தில் யாவரும் மூழ்கியிருந்தனர். சோமாவின் கீதத்தையும், திருஜ்ராஸ்வனுடைய நடனத்தையும் அங்கு கூடியிருந்தவர்கள், எப்பொழுதும் போல் சந்தோஷத்துடன் ரசித்தார்கள்.
2
“மதுரா! நீ மிகவும் களைப்படைந்து விட்டாயல்லவா?”
“இல்லை. எனக்குக் குதிரைச் சவாரி ரொம்பப் பிரியம்.”
“ஆனால், அந்தத் திருடர்கள் உன்னைக் கட்டிப் போட்டு இம்சித்து விட்டார்கள்?”
“ஆம். அவர்கள் பக்த ஜனங்களுடைய மாடுகளையும் குதிரைகளையும் மாத்திரமா திருட வருகிறார்கள். எங்கள் குலப் பெண்களையும் திருடிக் கொண்டு போகவல்லவோ வருகின்றனர்.”
“ஆம். மிருகங்களைத் திருடுவது வெகு காலம் வரை விரோதத்தை நிலைநிறுத்தி விடுகிறது. ஆனால் பெண்களைத் திருடுவதில் உண்டாகும் விரோதமிருக்கிறதே, அது வேரூன்றி விடுவதில்லை. ஏனென்றால், தன் மகளைத் திருடிக் கொண்டு சென்றவனைத் திரும்பவும் மருமகனாக ஏற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறதல்லவா?”
“உன்னுடைய பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?”
“குரு-குலத்தைச் சேர்ந்த கிரிச்ராஸ்வனுடைய புத்திரன் அமிர்தாஸ்வன்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 48, புத்தகங்கள், பக்கம், வால்காவிலிருந்து, அந்த, கங்கை, “ஆம், அங்கு, திருடிக், கொண்டு, மாமிசம், போல், சிறந்த, சோமா, முறையில், அந்தக்