வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 356
“நீங்கள் பகவானைக்கூட ஒப்புக்கொள்வதில்லையா?”
“எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி, மிருகங்களிலும் கேவலமாக-தீண்டத் தகாததாக
அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி ஹிந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும்கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து அவர்களுக்குத் தேர் ஓட்டித் தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறோம். நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக, எங்கள் பெண்மணிகளின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள், சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றுகூட வசவு கேட்பதும்-அடிபடுவதும்- பட்டினி கிடந்து சாவதும்தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது. இவ்வளவையும் பார்த்துக்கொண்டு மௌனமாயிருக்கும் அந்தப் பகவானை, நாங்கள் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்?”
“அப்படியானால் நீங்கள் டாக்டர் அம்பேத்காரின் வழியைப் பின்பற்றுகிறீர்களா?”
“இல்லை, டாக்டர் அம்பேத்காரும் ஒரு சுகபோகிதான், என்னையும், முதல் இரண்டு வருடங்கள் வரை ஹாஸ்டலிலே தங்க, ஹிந்து வாலிபர்கள் அனுமதிக்கவில்லை என்றாலும் டாக்டர் அம்பேத்காரின் பாதைக்கும், காங்கிரஸ் தீண்டாமை இயக்கத் தலைவர்களின் பாதைக்கும், ஒன்றும் வேற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. காந்திஜி-பிர்லா-பஜாஜ் பாதையில் தான், அம்பேத்காரின் பாதையும் போய்ச் சேருவதாக நான் கருதுகிறேன்; அதாவது தீண்டத்தகாதவர்களிலும் ஒரு சிலர் மாதம் 4,000ம் 5,000 சம்பளம் வாங்குபவர்களாக ஆகிவிட வேண்டும் என்பதுதான் டாக்டர் அம்பேத்காரின்
நோக்கம். பிர்லா-பஜாஜாக ஆக முடியாவிட்டாலும், ஒன்றிரண்டு ஹஜாரிமல் களாவது தீண்டத்தகாதவர்களிலே ஏற்பட்டுவிட வேண்டுமென்று அவர் விரும்புகிறார். தீண்டத்தகாதவர்களின் சமஸ்தானங்களைத் தோற்றுவிக்க முடியாவிட்டாலும் ஒன்றிரண்டு குட்டி ஜமீன்தார்களையாவது தோற்றுவிக்க ஆசைப்படுகிறார். இவைகளினாலெல்லாம், பத்துக் கோடி தீண்டத்தகாதவர்களின் வேதனை நிறைந்த வாழ்க்கையில் ஒன்றும் மாற்றம் ஏற்பட்டுவிட மாட்டாது.”
“சுரண்டப்படுவதைத் தடுத்துவிட வேண்டுமென்பதே உங்கள் கருத்தா?”
“ஆம். ஏழைகளின் உழைப்பின் பலனைத் திருடிக் கொழுப்பவர்கள் இந்தியாவில் அடியோடு இல்லாமல் போகும்வரை, எங்கள் பிரச்னைகளைத் தீர்த்துவிட முடியாது.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 356, புத்தகங்கள், எங்கள், நாங்கள், டாக்டர், அம்பேத்காரின், வேண்டும், வால்காவிலிருந்து, கங்கை, பக்கம், முடியாவிட்டாலும், பிர்லா, ஏற்பட்டுவிட, தோற்றுவிக்க, தீண்டத்தகாதவர்களின், ஒன்றும், ஒன்றிரண்டு, வந்திருக்கிறது, விரும்புகிறார், சிறந்த, தான், அவமானப்படுத்தப்பட்டு, வந்திருக்கிறோம், பாதைக்கும்