வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 354
“நல்ல வேளையாக இன்று வெள்ளம் வடிந்துவிட்டது” என்றான்.
“ஆம், மேகமும் கலைந்துவிட்டது.”
“நாம் எவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். 2500 வருடங்களுக்கு முன்னால் இந்தப் பாட்னா நகரம் அமைக்கப்பட்டபொழுது, இதைப் பார்த்த புத்த பகவான் இந்த நகரத்தை எல்லாவிதத்திலும் நாகரிகமுள்ள நகரம் என்று பாராட்டியதோடு இதற்கு நெருப்பு, தண்ணீர், உள் கலகம் என்ற மூன்று ஆபத்துக்களும் உண்டு என்றும் கூறியிருப்பதாக ஒருமுறை படித்தேன்.”
“நீங்கள் சரித்திர மாணவரா?”
“இல்லை. நான் எடுத்துக் கொண்டுள்ள விஷயம் அரசியல். என்றாலும், சரித்திரத்திலும் எனக்கு அதிக ஆசை உண்டு. முக்கியமாகப் பழைய நூல்களின் மொழி பெயர்ப்பைப் படிப்பதில்.”
“ஆம்; தண்ணீரின் ஆபத்தை, இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”
“பாட்னாவின் வீடுகளில் பெரும்பாலான மரங்களால் கட்டப்பட்டிருந்த அந்தக் காலத்தில் நெருப்பைப் பற்றிய பயம் இருந்திருக்கலாம். பக்கத்திலே பெரிய சால விருட்சக் காடுகள் இருந்தபொழுது, இந்த மாதிரிப்பயம்
ஏற்பட்டுத்தானே இருக்கும்?”
“உள் கலகந்தான், இந்தியாவின் செல்வம் யாவற்றையும் பாழாக்கியது. நல்லது; நான் உங்கள் பெயர் என்ன என்று தெரிந்துகொள்ளலாமா?”
“என் பெயர், சுமேர். பாட்னா காலேஜில் ஐந்தாவது வருட மாணவன்.”
“என் பெயர் ராம்பால ஓஜா. நானும் ஒரு காலத்தில் கலாசாலை மாணவனாக இருந்திருக்கிறேன். அது இருபது வருடங்களுக்கு முன்னால். ஒரு நண்பன் பலமாகத் தூண்டியிருக்காவிட்டால், நான் எம்.ஏ. யை முடிக்காமல் ஒத்துழையாமையில் இறங்கியிருக்க மாட்டேன். அப்படி வெளியே வந்ததற்காகவும் இப்பொழுது நான் வருத்தப்படவில்லை. இந்த மழையையும் வெள்ளப்பெருக்கையும் பார்த்த பொழுது, நமது பள்ளிக் கூடக் கலாசாலைப் படிப்புகள் வீணென்று தான் எனக்குத் தோன்றுகிறது.”
“அப்படியானால் நீங்கள் படித்ததையெல்லாம் மறந்துவிட்டீர்களா?”
“ஏறக்குறைய. முற்றிலும் மறந்து விட்டு, ‘அ,ஆ’ தெரியாத பட்டிக்காட்டானாக ஆகிவிட்டால் எவ்வளவோ நல்லது. அப்பொழுதுதான் உண்மையைச் சரியான முறையிலே தேடிப்பிடிக்க முடியும்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 354, புத்தகங்கள், நான், பெயர், பக்கம், முன்னால், கங்கை, வால்காவிலிருந்து, இப்பொழுது, காலத்தில், “என், நல்லது, உண்டு, பாட்னா, சுமேர், சிறந்த, “ஆம், வருடங்களுக்கு, நகரம், பார்த்த