வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 337
சகீனா அங்கிருந்து போய் விட்டாள். சங்கர்-சபதர் சம்பாஷணை, முக்கியமான விஷயங்களிலே திரும்பிற்று.
சபதர்-“சங்கர்! இப்பொழுது நாம் முற்றிலும் ஒரு புதிய புரட்சி யுகத்திலே நுழைந்து கொண்டிருக்கிறோம். 1857ம் வருடத்திற்குப் பிறகு, இப்பொழுதுதான் முதல் முதலாக இந்தியர்கள் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.”
சங்கர்-“அரசியல் போராட்டத்தைப் பற்றிச் சொல்லுகிறாயா சபதர்?”
“அரசியல் போராட்டம் என்று சொல்வது பொருத்தமற்ற வார்த்தை, சங்கர். 1885ம் வருடம் இந்திய தேசீய காங்கிரஸ் ஸ்தாபிக்கப் பட்டது. அப்பொழுது அது ஆங்கிலேய ஐ.ஸி.எஸ். பென்ஷனர்களின் தயவிலேயே இருந்தது. அதனுடைய கிறிஸ்துமஸ் காலத்து அழகிய பொதுக் கூட்டங்களையும், பெருமழை போன்ற சொற்பொழிவுகளையும் பார்த்த ஜனங்கள் அதைப் ‘போத்தல் போராட்டம்’ என்று குறிப்பிட்டார்கள். அதற்குநீ ‘போராட்டம்’ என்று பெயர் கொடுக்க விரும்பினால் அது சரியாயிருக்கலாம்.
ஆனால் இப்பொழுது நடப்பது, போராட்டம் என்று சொல்லமுடியாது. நாம் புரட்சி யுகத்திலே கால் எடுத்து வைக்கிறோம்.”
“ஏனெனில் காந்திஜி, திலகர் சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய் சேகரித்து விட்டார். எங்கு பார்த்தாலும் சுயராஜ்யக் கூச்சல் பலமாகக் கேட்கிறது என்பதுதானே.”
“புரட்சி அல்லது புரட்சிகரமான போராட்டம், ஒரு தனி மனிதனின் பலத்தைக் கொண்டு மட்டும் நடப்பதில்லை. புரட்சியால் ஏற்படும் மகத்தான மாற்றங்கள் ஒருவரல்ல. அரை டஜன் மகாத்மாக்களின் சக்திக்கும் அப்பாற்பட்டது. இப்பொழுது நடக்கும் இந்தப் போராட்டத்தின் அடிப்படையைப் பற்றி நான் யோசிக்கும் பொழுதெல்லாம் இது மகத்தான புரட்சி என்ற முடிவிற்கே வருகிறேன். 1857ம் வருடம் நடந்த சுதந்திரப் போரில் தலைமை வகித்தவர்கள் பதவியிழந்த சிற்றரசர்கள். ஆனால், தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடியவர்கள் சாதாரண ஜனங்கள். நம்முடைய அநேக பலவீனங்களால், நாம் அதில் வெற்றி பெற முடியவில்லை. தோல்வி அடைந்த ஜனங்கள் மீது ஆங்கிலேயர்கள் கோபம் முழுவதையும் காட்டிக் கொடுமை செய்தார்கள். அது போகட்டும். 1857ம் வருடத்திற்குப் பிறகு, இப்பொழுதுதான் நாட்டின் விடுதலைப் போரிலே பொதுமக்களும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். இந்தியாவின் சரித்திரத்தை, அதிக சிரத்தை எடுத்துப் படித்த சரித்திர மாணவனாகிய நீயே சொல்; இந்த மாதிரி இந்தியப் பொதுமக்கள் முழுவதும் பங்கெடுத்துக் கொண்ட போராட்டம் வேறு எப்பொழுதாவது நடந்தது உண்டா?”
“அண்ணா! நாகப்பூர் காங்கிரஸும் (1920) கல்கத்தா காங்கிரஸும் முடிந்துவிட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்பட்டு வரும் பெரிய பெரிய மாற்றங்களையும் நான் பார்க்கிறேன். இவைகள் சாதாரண விஷயங்களல்ல.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 337, புத்தகங்கள், போராட்டம், 1857ம், புரட்சி, பக்கம், நான், ஜனங்கள், நாம், இப்பொழுது, சங்கர், வால்காவிலிருந்து, கங்கை, சபதர், மகத்தான, பெரிய, காங்கிரஸும், பங்கெடுத்துக், சாதாரண, வருடத்திற்குப், யுகத்திலே, சிறந்த, பிறகு, இப்பொழுதுதான், “அரசியல், வருடம்