வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 318
“அவர்கள் படிப்பிக்கப்படுகிறார்கள். ஆனால் பதின் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் உபயோகப்படக் கூடிய கலைகளை மட்டுமே.”
“அப்படியானால், இங்கிலாந்திற்கு வருவதற்கு உன் தாயார் எப்படி அனுமதி கொடுத்தாள்?”
“அனுமதி கொடுத்தாளா! நான் சொல்லாமலே வந்து விட்டேன். பாதிரி உதவி செய்தார். கேம்பிரிட்ஜிலே படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்து தந்தார். நான் இங்கு வந்து எனது சௌக்கியத்தைப் பற்றியும் சந்தோஷத்தைப் பற்றியும் எழுதிய பொழுது என் தாயாரின் ஆசீர்வாதமும் கிடைத்தது; அவளுக்கு வயது ஐம்பத்தைந்திற்கு மேல் ஆகிவிட்டது. ஒவ்வொரு கடிதத்திலும் என்னைப் புறப்பட்டு வரும்படி எழுதிக்கொண்டிருக்கிறாள்.”
“நீ என்ன பதில் எழுதுகிறாய்?”
“பதிலா? ஏதாவது சால்சாப்புத்தான். தன் மகன் சாமராஜ்யத்தின் தலைநகரில் இருக்கிறான். இங்கிலாந்தின் மகாராணியைச் சந்தித்துப் பேசுவான், என்றாவது ஒரு நாள், சேத்சிங்கின் சிம்மாசனத்திற்கு எஜமானனாகத் திரும்பி வருவான் என்று அவள் நம்பிக்கொண்டிருக்கிறாள்.”
“பாவம், அந்தக் கங்கையை வணங்கும் ஹிந்துத் தாய்க்கு நீ மகாராணி. விக்டோரியாவைச் சந்திப்பதற்குப் பதிலாக, உலகத்திலேயே முடிதரித்த தலைகளுக்கெல்லாம் பயங்கர விரோதிகளான காரல் மார்க்ஸையும், பெடரிக் ஏங்கெல்ஸையும் சந்தித்துக் கொண்டிருக்கிறாய் என்பது எப்படித் தெரியும்?”
“இப்பொழுதைய இந்தியா, முதலாளித்துவ உலகத்தையும், அதன் சக்தியையுமே புரிந்து கொள்ளாதிருக்கும்போது, மார்க்ஸின் பொது உடைமைக் கொள்கையை அது எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?”
“நீ மார்க்ஸு டன் இந்தியாவைப் பற்றி எப்பொழுதாவது பேசியிருக்கிறாயா?”
“எத்தனையோ தடவை. அவர் இங்கேயே உட்கார்ந்து கொண்டு, இந்தியாவின் வாழ்க்கைப் போக்கைப் பற்றி எவ்வளவு அதிகம் தெரிந்து கொண்டிருக்கிறார் என்பதை நினைக்கும் பொழுது, எனக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. ஆனால் இது ஒன்றும் மந்திர சக்தியல்ல. கடந்த முன்னூறு வருடங்களாக தனித்தனி ஆங்கிலேயர்கள் இந்தியாவைப் பற்றி எவ்வளவு அறிவைச் சேகரித்தார்களோ, அவை யாவும் எழுத்து வடிவம் பெற்று இந்த லண்டனிலே இன்றும் இருக்கிறது. அந்தக் குறிப்புக்களையும், சுவடிகளையும்
மார்க்ஸ் மிக்க கவனத்துடன் படித்திருக்கிறார். மேலும், அவர் சந்தித்த ஒவ்வொரு இந்தியனையும் கேட்டுக் கேட்டுத் தனது கருத்துக்களை உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறார்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 318, புத்தகங்கள், பக்கம், பற்றி, கங்கை, வால்காவிலிருந்து, இந்தியாவைப், அந்தக், எவ்வளவு, கொண்டிருக்கிறார், ஒவ்வொரு, அவர், வந்து, படிப்பதற்கு, சிறந்த, ஒன்றும், ஏற்பாடுகள், பற்றியும், நான், பொழுது