வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 305
“யார் வழக்கு நடத்தினார்கள் சாகிப்?”
“பார்லிமெண்ட். எங்கள் நாட்டிலே அரசன் தன் மனம் போனபடி எதையும் செய்ய முடியாது. எதேச்சாதிகாரம் செய்த ஒரு அரசனின் கழுத்தை நாங்கள் கோடாரியால் வெட்டி விட்டோம். அந்தக் கோடாரி இன்னும் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. பார்லிமெண்ட் என்பது பஞ்சாயத்து. அதில் பெரும்பாலோர் நாட்டிலுள்ள பணக்காரப் பெரிய மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சில பெரிய ஜமீன்தார்கள், வாரிசு பரம்பரையாக அதற்கு வருகிறார்கள்.”
“ஜமீன்தார்கள் எவ்வளவு காலமாக இருந்து வருகிறார்கள் சாகிப்”
“எங்கள் நாட்டைப் பார்த்துத்தான், இந்தியாவிலும் ஜமீன்தாரி முறை புகுத்தப்பட்டிருக்கிறது. எங்கள்நாட்டிலே அது பல நூற்றாண்டுகளாக அமுலில் இருக்கிறது. எங்கள் நாட்டிலும் அந்த முறையால், விவசாயிகளிடமிருந்து, நில உரிமை பலவந்தமாகத்தான் பறிக்கப்பட்டிருக்கிறது. ஜமீன்தாரி முறையை இங்கு புகுத்திய கவர்னரின் பெயர் தெரியுமா?”
“தெரியும், காரண்வாலிஸ்.”
“ஆம்; சீமையிலே அவன் முதல் நம்பர் கொலைகார ஜமீன்தார். அவன் இங்கு வந்ததும் விவசாயிகள் நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும்வரை பஞ்சம் வெள்ளம் போன்ற நிலைமை ஏற்படும் பொழுது வாரம் சரியாக வசூலாக மாட்டாது என்பதைத் தெரிந்து கொண்டான். மேலும் கடல் கடந்து வந்துள்ள ஆங்கிலேயர்கள் இந்த அன்னிய நாட்டிலே நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று கருதினான். அந்த நண்பர்களின் நலனும் தங்களுடைய நலனும் இணைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று அவன்
விரும்பினான். அதற்காகவே இந்த ஜமீன்தாரி முறையைப் புகுத்தினான். ஜமீன்தார்கள் ஆங்கிலேயர்களின் சிருஷ்டி, விவசாயிகள் கலகம் செய்தால் அது போலவே, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுவது போலவே, ஜமீன்தார்கள் சொத்துக்கும் மரியாதைக்கும் ஆபத்தை உண்டாக்கும். ஆகவே விவசாயிகளை, நிலச்சொந்தக்காரர்களாக ஏற்றுக் கொள்ளாமல் பெரிய பெரிய ஜமீன்தார்களை உற்பத்தி செய்தால், அது ஆங்கிலேயர்களுக்கு ஆபத்துக் காலத்திலும் அமைதிக் காலத்திலும் லாபகரமானது என்று கருதி, அந்தக் கொலைகார ஜமீன்தார் இந்திய விவசாயிகளின் கழுத்தை அறுத்துவிட்டான்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 305, புத்தகங்கள், அவன், பெரிய, பக்கம், ஜமீன்தாரி, எங்கள், ஜமீன்தார்கள், வால்காவிலிருந்து, கங்கை, நலனும், விவசாயிகள், ஜமீன்தார், ஆங்கிலேயர்களின், காலத்திலும், போலவே, செய்தால், கொலைகார, அந்த, கழுத்தை, நாட்டிலே, அந்தக், சிறந்த, அவனை, வருகிறார்கள், இங்கு