வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 302
சோபரன் - “ஆம். நாம் தோற்றுப் போய்விட்டோம். பன்னிரு பர்கானாவைச் சேர்ந்த விவசாயிகள் ஒற்றுமையாகச் சேர்ந்து கொண்டு,
ஜமீன்தாரை எஜமானனாக ஒப்புக் கொள்ள மறுத்தார்களாம். சப்ராவுக்குப் போய் கும்பினி சாகிப்பிடம் ‘எங்கள் பஞ்சாயத்து உங்களுக்கு வாரத்தைச் செலுத்திவிடும். நாங்கள் ஜமீன்தாரை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொன்னார்களாம். அதற்கு அந்த சாகிப் சொன்ன பதில் தெரியுமா? பஞ்சம், வெள்ளப்பெருக்கு எந்தக் காலத்திலும் குறைவில்லாமல் வாரம் செலுத்த வேண்டும் என்று கேட்டாராம். பஞ்ச காலத்தில் தங்கள் குழந்தை குட்டிகளின் உயிரையே காப்பாற்ற முடியாதே. இந்தப்பரங்கி, பரங்கிக்கு எங்கே இருந்து கொடுப்பது? கடவுளுக்குக் கூடப் பயப்படாத அந்தப்பரங்கி, இதைக்கூட மனப்பூர்வமாகச் சொல்லவில்லை. மேலும் அவர், நீங்கள் எல்லோரும் பிச்சைக்காரர்கள். நீங்கள் வாரம் செலுத்தாவிட்டால் கம்பெனி உங்களிடமிருந்து எப்படி வசூல் செய்யும்? மரியாதை உள்ள பணக்காரர்களை நாங்கள் ஜமீன்தார்களாக ஆக்குகிறோம். அவர்கள் தங்கள் வீடு, வாசல், சொத்துக்கள் ஏலம்போய் விடுமென்றும், தங்களுடைய மரியாதை கெட்டு விடுமென்றும் பயந்து, எங்கள் வாரத்தைச் சரியாகச் செலுத்துவார்கள் என்று கூறி விட்டாராம்”.
ரேக்கா - “அதனால்தான் இந்தப் பரங்கிகளுக்கு உடம்பெல்லாம் குஷ்டம் பரவுகிறது. இவர்கள் கொஞ்சம் கூடக் கருணை இல்லாதவர்கள்.”
சோபரன் - “அயோக்கியர்களுக்கு வேறு வழியில்லாத போது எதையும் செய்யத் துணிந்து விடுகிறார்கள். இந்தக் கும்பினி வீரனாயிருந்தால், வீரனைப் போல் சண்டை போட வேண்டும். யுத்த வீர்களோடு யுத்தம் செய்ய வேண்டும். முஸ்லீம் அரசர்களிடம் கற்கோட்டைகளும் துப்பாக்கிகளும்தான் இருந்தன. இந்தக் கும்பினியிடமோ பீரங்கி இருக்கிறது. மேலும் எங்கிருந்தோ கறுப்புப்
பட்டாளமும் வெள்ளைப் பட்டாளமும் வந்து குவிந்தன. கிராமம் கிராமமாகக் கொளுத்தினார்கள். குழந்தைகளையும், பெண்களையும் கொன்று குவித்தார்கள். பாவம், பழைய அரசர்கள் என்ன செய்யமுடியும்?”
மௌலா - “விவசாயம் இந்த விதமாக நசுக்கப்பட்டு விட்டது. இப்பொழுது சேணியர்கள் வாயிலும் மண் விழத் தொடங்கிவிட்டது. இந்த கும்பினி பஹதூர் சீமையிலிருந்து துணிகளைக் கொண்டு வந்து விற்கத் தொடங்கிவிட்டானாம்”.
முன்ஷி - “யந்திரங்களே நூற்று நெய்கிறதாம். என்னுடைய சட்டையைப் பார். இது அந்தத் துணிதான். சர்க்காவில் நூற்று கைத்தறியில் நெய்த துணி. இவ்வளவு நல்லதாயும் மலிவாயும் இருக்காது. எஜமானர்களுடைய தர்பாருக்குப் போவதற்கும், மரியாதைக்காகவும்தான் இந்தத் துணியை உடுத்த வேண்டியிருக்கிறது. ஏன் சிரிக்கிறாய் ரேக்கா? தர்பாருக்குப் போக வேண்டி நேர்ந்தால் உனக்கும் அப்பொழுது தெரியும்?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 302, புத்தகங்கள், வேண்டும், பக்கம், கும்பினி, வால்காவிலிருந்து, நாங்கள், கங்கை, நீங்கள், மரியாதை, விடுமென்றும், பட்டாளமும், நூற்று, தர்பாருக்குப், வந்து, மேலும், இந்தக், ரேக்கா, வாரத்தைச், செலுத்த, போய்விட்டோம், சிறந்த, சோபரன், கொண்டு, வாரம், கொள்ள, ஜமீன்தாரை, தங்கள்