வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 287
அக்பர்-“நண்பா! என் ஆயுளில் ஒரே ஒரு முறைதான் என் கண்களிலே கண்ணீர் வந்தது. அன்று குஜராத்திலே சிங்க வேட்டையாடுவதற்காகப் போயிருந்தேன். யானையின் மீது ஏறிக்கொண்டு, துப்பாக்கிக் குண்டினால் சிங்கத்தைக் கொல்வது பெரிய வீரச் செயலல்ல என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். சிங்கத்தைப் போல நமக்கு நகங்களும், கோரப் பற்களும்
கிடையாது. அதற்காக நாம் கத்தியையும் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு போராடினால் சம பலமாயிருக்கலாம். அதற்கு மேல் வைத்துக் கொள்வது அதிகந்தான். ஆயினும், நான் துப்பாக்கியால் சிங்கத்தைச் சுட்டேன். குண்டு அதன் தலையிலே பட்டது. சிங்கம் அங்கேயே விழுந்துவிட்டது. அதே சமயத்தில் புதருக்குள்ளிருந்து ஒரு பெண் சிங்கம் பாய்ந்து வந்தது. அது வெறுப்போடு என்னைப் பார்த்துவிட்டு, திரும்பி விழுந்து கிடந்த ஆண் சிங்கத்தின் கழுத்தை நக்கத்தொடங்கிற்று. நான் உடனே சுடுவதை நிறுத்தும்படி வேட்டைக்காரர்களுக்கு உத்தரவிட்டேன். அப்பொழுது என் மனத்தில் ஏற்பட்ட காயம் ஆறவேயில்லை. அந்தப் பெண் சிங்கம் என்மீது பாய்ந்து என்னைக் கொல்ல முயன்றிருந்தாலும் நான் தடுத்திருக்கவே மாட்டேன். அந்தச் சிங்கத்திற்கும் நம்மைப்போல் பல மனைவியர்கள் இருந்திருந்தால், இந்தப் பெண் சிங்கம் இந்த மாதிரி அன்போடு கழுத்தை நக்கிக் கொண்டிருக்குமா என்ற எண்ணம்தான் என் மனத்திலே தோன்றிற்று.”
அபுல்பஜல்-“நம் தேசம் முன்னேற வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது. ஆனால் நமது நடையோ மிக மெதுவாக இருக்கிறது. நமது கால்கள் நடக்கும் சக்தியை இழந்துவிட்ட பிறகு இந்தப் பாரத்தைத் தூக்கிச் சென்று சேர்ப்பவர்கள் யாரும் இருப்பார்களா என்பதும் நமக்குத் தெரியாது.”
அக்பர்-‘வாளேந்தும் இந்த இரண்டு கைகளும் ஹிந்து முஸ்லீம் இரண்டு சாதிகளின் ரத்தமும் ஒன்றாகக் கலக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். இந்த இணைப்பைக் கருத்தில் கொண்டே பிரயாகை திரிவேணி சங்கமத்தில்
கோட்டை கட்டினேன். அந்தக் கங்கையும் யமுனையும் கலக்கும் காட்சி, மனத்திலே ஹிந்து-முஸ்லீம் என்ற இரண்டு ஜாதிகளின் இணைப்பு எண்ணத்தையும் தோற்றுவித்தது. ஆனால் என்னுடைய ஆசை எவ்வளவு குறைவாக நிறைவேறியிருக்கிறது. உண்மையில் ஏழு தலை முறையில் செய்ய நடக்கக்கூடிய காரியத்தை, ஒரு தலைமுறையில் செய்ய முடியாததுதான். ஆயினும், எனக்குக் கிடைத்துள்ள தோழர்களைப் பற்றி நான் கர்வப்படுகிறேன். இந்த மாதிரித் தோழர்களைப் பெறும் பாக்கியம் எல்லோருக்கும் சுலபமாகக் கிடைப்பதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் அக்பரும் ஜோதிபாயும் போன்ற ஜோடிகளைக் காண விரும்பினேன். மேஹருன்னிஸாவும்... அவளுக்கு ஜோடி என்னால் அடைய முடியவில்லை.”
தோடர்மல்-“ஹிந்துக்கள் தகுதியற்றவர்கள் என்று நிரூபணமாகிவிட்டது.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 287, நான், புத்தகங்கள், சிங்கம், பக்கம், இரண்டு, பெண், வால்காவிலிருந்து, கங்கை, ஹிந்து, நமது, முஸ்லீம், தோழர்களைப், செய்ய, மனத்திலே, இந்தப், ஆயினும், வந்தது, சிறந்த, பாய்ந்து, கழுத்தை, அக்பர்