வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 211
10
பாடலிபுரத்தின் அசோகாராம் மடத்திற்குப் பிக்ஷு அஸ்வகோஷ் வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. அவன் புத்த தத்துவங்களோடு கிரேக்க தத்துவங்களையும் மிகச் சிறந்த முறையில் கற்றுத் தேர்ந்தான். மகத நாட்டின் பௌத்த சங்க மகா வித்வான்களிலே அஸ்வகோஷ் தலைசிறந்தவனாகக் கருதப்பட்டான். அந்தச் சமயத்தில், மேற்கிலிருந்து வெற்றியுடன் கிழக்கே
வந்து கொண்டிருந்த சக்கரவர்த்தி கனிஷ்கன், புத்த மதத்திற்கும் புத்த தத்துவத்திற்கும் கேந்திர ஸ்தானமாக விளங்கிய பாடலிபுரத்திற்கு வந்தான். சக்கரவர்த்தி கனிஷ்கனுக்கு, பௌத்த மதத்தில் அதிகமான ஈடுபாடு உண்டு. தனது காந்தார நாட்டிலே பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக ஒரு சிறந்த அறிஞரை அனுப்ப வேண்டுமென்று சங்கத்தார்களிடம் கேட்டுக் கொண்டபொழுது, அவர்கள் அஸ்வகோஷையே அனுப்பி வைத்தார்கள்.
கனிஷ்கனின் தலைநகரான பெஷாவரை அடைந்ததும் அஸ்வ கோஷ் சகர-கிரேக்க-துருக்கிய-பாரசீக-பாரத நாட்டு நாகரிகங்கள் யாவும் ஒன்றாகக் கலக்கும் ஒரு சங்கம் ஸ்தானத்திற்கு வந்திருப்பதை உணர்ந்தான். கிரேக்க நாடகக் கலையை பாரத மயமாக்குவதிலே, அவன் ஏற்கனவே வெற்றி பெற்றிருக்கிறான். கிரேக்க தத்துவங்களை அவன் நன்றாகக் கற்றறிந்த பிறகு அவற்றிலே உள்ள சிறந்த அம்சங்களையெல்லாம் பாரதத் தத்துவத்தோடு இணைத்து ஒரு புது வழியையும் காட்டினான். குறிப்பாக பௌத்த தத்துவாசி ரியர்களுக்கு, கிரேக்க தத்துவத்திலிருந்து எடுத்தாளும் வழியைத் திறந்துவிட்டான். அவனைப் பின்பற்றி பாரதநாட்டின் சிந்தனையாளர்கள் பலரும், புதுமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர்களுள் வைஷேஷிக தத்துவாசிரியர்களும் நியாயத் தத்துவாசிரியர்களும் இவ்வழியில் அதிகம் முன்னேறினார்கள். உண்மை, சமநிலை, பொருள், தன்மை, உருவம் ஆகிய தத்துவ அம்சங்களை, அவர்கள் கிரேக்க தத்துவத்திலிருந்து எடுத்தாண்டிருக்கிறார்கள்.
பிரபா, அஸ்வகோஷின் இதயத்தை விசாலப்படுத்தி விட்டுச் சென்றாள். ஆகவே பிக்ஷு அஸ்வகோஷிற்குத் தன்னைப் பற்றிய சிந்தனையே கிடையாது. பிரபாவின் நினைவிலே, அவன் அநேக காவியங்களையும் நாடகங்களையும் எழுதினான். அவற்றில் பல மறைந்தொழிந்து விட்டன என்றாலும், இயற்கை தேவி அஸ்வகோஷின் சிருஷ்டிகளிலே அதிக அன்புடையவளாய் இருந்திருக்கிறாள். அதனால்தான் 1700 வருடங்களுக்குப் பிறகு அவனுடைய சிறந்த சிருஷ்டிகளான ‘சாரீபுத்திர-பிரகரன்’ என்ற நாடகத்தை மத்திய ஆசியாவின் பெருமணற் பிரதேசம் (கோபி) திருப்பித் தந்தது. அவனுடைய ‘புத்த சரிதமும்’ ‘சௌந்தரியானந்த’மும் இணையற்ற காவியங்கள். அவன் பிரபாவிற்குக் கொடுத்த வாக்கைக் கடைசி வரை காப்பாற்றினான். அவளுடைய காதலும், அழியா இளமையும் அவனுடைய கவிதைகளிலே அழகை நிரப்பிக் கொண்டிருந்தன; அவனுடைய சிருஷ்டிகளிலெல்லாம், “சாகேதத்தைச் சேர்ந்த ஆர்ய சுவர்ணாட்சியின் புதல்வன் அஸ்வகோஷ் எழுதியது” என்று குறிப்பிட்டுத் தன் பெயரோடுகூட தான் பிறந்த சாகேதத்திற்கும் பெற்றெடுத்த தாய் சுவர்ணாட்சிக்கும் சிரஞ்சீவித் தன்மையை உண்டாக்கிவிட்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 211, கிரேக்க, சிறந்த, அவன், புத்தகங்கள், பௌத்த, அவனுடைய, பக்கம், புத்த, கங்கை, வால்காவிலிருந்து, அஸ்வகோஷ், தத்துவாசிரியர்களும், அஸ்வகோஷின், தத்துவத்திலிருந்து, பாரத, பிக்ஷு, சக்கரவர்த்தி, வந்து, பிறகு