வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 16
பூரணச் சந்திரன் மாதிரி இருக்கின்றன அவர்களுடைய முகங்கள்.
அகினுடைய தாய், நெஞ்சில் வலது ஸ்தனத்தைச் சேர்த்துக் கட்டியிருக்கும் ரோமங்கள் அடர்ந்த தோலைக் கழற்றிக் கீழே போட்டு, அதன்மீது உட்கார்ந்து கொண்டு மடியில் வைத்து அணைத்துக் கொள்கிறாள் தன் மகனை. அகினுக்குப் பரம சந்தோஷம். அந்தச் சிறிய வாயின் வெளியே தோன்றும் முத்துப் போன்ற பற்களைப் பாருங்கள். அவனுடைய உச்சி மீதும், கன்னங்களிலும் அவன் தாய் கொடுக்கும் ஒவ்வொரு முத்தத்துக்கும் அவன் சிரிப்பதைப் பாருங்களேன்! சில மாதங்களாக விடாது தொடர்ந்து பனி பெய்துகொண்டிருந்ததால், ஆகாரத்துக்குத் தட்டு ஏற்பட்டதில் அவளுடைய சரீரம் மெலிந்திருந்தாலும் அழகையிழந்து விடவில்லை. முகத்திலும் அதே பொலிவுதான். அவள் தன்னுடைய மிருதுவான கரிய நுனியுள்ள ஸ்தனத்தை அகினுடைய வாயில் வைத்தாள். இப்பொழுது அந்தச் சின்னக் குழந்தையின் கண்கள் பாதி மூடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். அந்தச் சின்னஞ்சிறு கால்கள், மெதுவாக, ஆனால் எவ்வளவு ஒய்யாரமாக ஆடுகின்றன! தாயினுடைய மடியிலே, அந்தக் குழந்தை அனுபவிக்கும் ஆனந்தத்தைப் பாருங்கள். அவனுடைய வலது கையின் சின்னஞ்சிறு விரல்கள் அவளுடைய இடது ஸ்தனத்தின் கரிய நுனியை வருடிக் கொண்டிருப்பதைப் பார்த்தீர்களா?
இந்த ஏகாந்தமான குகையிலே இவர்களை, அவர்களுடைய அலுவல்களைக் கவனிக்க விட்டுவிட்டு, நாம் அடுத்த காட்சியைப் பார்ப்போமா?
2
அதோ, அநேகம் பாதங்கள் வழி கூடிப்போவதை நாம் பார்க்கிறோம். சப்தம் கேட்காமலிருப்பதற்காகத் தானா அந்தப் பாதங்கள் தோலால் மூடப்பட்டிருக்கின்றன? அவைகள் எங்கு நோக்கிச் செல்லுகின்றன? நாமும் தொடர்ந்து போவோம். ஒரு பக்கமாகத் திரும்பி மலைக் காட்டுக்குள் புகுந்துவிட்டன. நாம் இவ்வளவு வேகமாக நடந்தும் அந்தப் பாதங்களைத் தொடர்வது கடினமாயிருக்கிறதல்லவா? அவைகளும் நின்ற பாடாயில்லை. பனி படர்ந்த பூமி, காடடர்ந்த மலைவரிசை, அப்பால் பனிப் படலங்கள், இவ்விதமாக நாம் கடந்து இதுவரை வந்திருக்கிறோம். அதோ தெரிகிறதே அந்த மனிதக் கூட்டத்திற்குப் பின், நீல நிறமான இந்த ஆகாயம் நிர்மலமாயில்லாவிட்டால் அவர்களை நாம் பார்க்கவே முடியாது போலிருக்கிறதே! நாமும் வெகு வேகமாக நடந்து அவர்களைச் சமீபித்து விட்டோம். அவர்களுடைய உடம்பின் மேல் மூடப்பட்டிருக்கிறதே, அந்த ரோமங்கள் அடர்ந்த தோலின் நிறத்திற்கும், இந்தப் பனி நிறத்திற்கும் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா? அவர்களுடைய கைகளிலிருக்கும் ஆயுதங்கள் கூட ஒரே வெண்மையாய்த்தான் தோற்றமளிக்கின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 16, அவர்களுடைய, நாம், புத்தகங்கள், அந்த, பாருங்கள், ரோமங்கள், அந்தச், பக்கம், வால்காவிலிருந்து, கங்கை, கரிய, அவளுடைய, சின்னஞ்சிறு, கொண்டிருப்பதைப், நாமும், நிறத்திற்கும், வேகமாக, தொடர்ந்து, அந்தப், பாதங்கள், வலது, இப்பொழுது, மூடிக், மிருதுவான, சிறந்த, பின், அகினுடைய, அவனுடைய, அடர்ந்த, தாய், அவன்