வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 137
“என் கண் முன்னாலேயே பிரமவாதத்தின் ஒரு சிறு கங்கு அதுவும் நல்ல நோக்கத்தோடல்ல- பிரவாஹனின் மூளையிலிருந்து தெறித்தது. அது இப்பொழுது காட்டு நெருப்பாக மாறி, பாஞ்சாலம் பூராவையும் எரித்து விட்டதோடு விதேகத்தையும் எட்டிவிட்டது.”
“பாட்டி! உனது வார்த்தைகளின் உண்மை இப்பொழுதுதான் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படுகிறது. உண்மையிலேயே இது பொருள் சேர்க்கும் ஒரு பெரிய வழிதான். விதேகத்தில் யக்ஞவல்க்கீயனுக்கு லட்சக்கணக்கான சொத்துக் கிடைத்தது. மற்ற பிராமணர்களுக்கும் போதுமான பொருள்கள் கிடைத்தன.
“வேள்வியைவிட இது மிக லாபகரமான வியாபாரம் மகளே! பிராமணர்களுக்கும், அரசர்களுக்கும் சுகவாழ்வை உறுதியோடு காப்பாற்றும் சக்தி வாய்ந்த படகு என்று, என் கணவன் இதை வருணிப்பான். ஜனகனுடைய
சபையிலே யக்ஞவல்க்கீயன் வெற்றி பெற்றானாக்கும்? அங்கே நீ ஒன்றும் பேசவில்லையா?”
“பேச வேண்டியதில்லை என்றால், கங்கையிலே இவ்வளவு தூரம் படகேறிச் செல்வானேன்?”
“படகுப் பிரயாணத்திலே திருடர்களோ, கொள்ளைக்காரர்களோ வழி மறிக்கவில்லையா?”
“இல்லை பாட்டி! நல்ல பாதுகாப்போடு சென்ற வியாபாரக் கூட்டங்களோடு சேர்ந்து போனோம். தனிமையில் போய் தங்கள் உயிரை ஆபத்தில் மாட்டிக்கொள்ளக் கூடிய அவ்வளவு முட்டாள்களல்ல பிரமவாதிகள்.”
“யக்ஞவல்க்கீயன் எல்லோரையும் தோற்கடித்து விட்டானா?”
“அதைத் தோற்கடித்து விடுதல் என்று சொல்ல முடியாது பாட்டி!”
“அப்படியானால் என்ன?”
“ஏனெனில் கேள்வி கேட்கிறவன் யக்ஞவல்க்கீயனுடைய பதிலைக் கேட்டதும், வாய் மூடி மௌனியாகி விடுகிறான்.
“நீ கூடவா?”
“ஆம். நானுந்தான். என்னை விவாதத்தில் அல்ல, முட்டாள்தனத்தினால்தான் மௌனியாக்கி விட்டான்...”
“முட்டாள்தனத்தினாலா?”
“ஆம். பிரமத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன்.
யக்ஞவல்க்கீயன் தப்ப முடியாதபடி என் கேள்விகளால் வளைத்துக் கொள்ளப் பட்டு விட்டான். அந்தச் சமயத்தில் அவனுடைய வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகள்! அவனைப் போன்ற அறிவாளிகளிடமிருந்து அவ்வித வார்த்தைகள் வருமென்பதை நான் கற்பனை கூடச் செய்ததில்லை.
“அது என்ன மகளே?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 137, புத்தகங்கள், பக்கம், வால்காவிலிருந்து, “ஆம், கங்கை, என்ன, தோற்கடித்து, விட்டான், வார்த்தைகள், பாட்டி, நல்ல, சிறந்த, பாஞ்சாலம், பிராமணர்களுக்கும், மகளே, யக்ஞவல்க்கீயன்