வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 136
பிரவாஹன் இறந்து அறுபது வருடங்கள் ஆகியிருந்தன. அவன் இறக்கும் பொழுது, அவனது பிர்மவாதத்தின் புகழைப் பரப்பும் யக்ஞவல்க்கீயன் தோன்றவில்லை. ஆனால் நூறு வயதைக் கடந்து விட்ட லோபா பாஞ்சாலத்தின் உத்யான வனத்திலே வசித்துக் கொண்டிருக்கிறாள். ராஜ உத்யான வனத்திலே மா, வாழை, நாவல் முதலிய மரங்களின் நிழலிலே வசிப்பதைத்தான் அவள் விரும்பினாள். உயிரோடிருந்த காலத்தில், பிரவாஹனின் ஒவ்வொரு காரியத்திலும் அவள் சண்டையே போட்டு வந்திருக்கிறாள். ஆனால் இந்த அறுபது வருட காலத்தில், அவனுடைய குற்றங்களையெல்லாம் மறந்து விட்டாள். அவனுடைய நினைவிலே நிறைந்திருப்பது, பிரவாஹனின்
எல்லையற்ற காதல்தான். இன்னும் அவளுடைய கண்களிலே ஒளி இருக்கிறது. அவளுடைய புத்தி மந்தப்பட்டு விடவில்லை. பிரமாவாதிகளை அவள் இன்னும் பலமாகத் திட்டிக் கொண்டுதான் இருக்கிறாள்.
ஒருநாள் பிரமவாதினி கார்க்கி, பாஞ்சாலபுரத்திற்கு வந்தாள். ராஜ உத்யானவனத்திற்குப் பக்கத்திலுள்ள ஒரு தோட்டத்தில், அவள் மிக மரியாதையாக வரவேற்கப்பட்டாள். ஜனகன் கூட்டிய அந்த மகா சபையிலே யக்ஞவல்க்கீயன் தன்னை ஏமாற்றித் தோற்கடித்ததை கார்க்கியால் மறக்க முடியவில்லை. “இதற்குமேல் கேள்வி கேட்டால் உன் தலை அறுந்து விழுந்துவிடும் கார்க்கி” என்று அவன் கூறினானே இதுவும்; ஒரு விவாதத்தின் தோரணையா? ஒரு கொலைகாரன்தான் இப்படிப் பேச முடியும் என்று நினைத்தாள் கார்க்கி.
கார்க்கி, லோபாவின் அண்ணன் பேத்தி. லோபாவுக்கு அவளை நன்றாகத் தெரியும். ஆயினும் அவளுடைய பிரமவாதக் கொள்கையிலே லோபா முற்றிலும் வேறுபட்டக் கருத்துடையவள். இப்போது யக்ஞவல்க்கீயன் வெற்றி பெறுவதற்காக உபயோகித்த தவறான ஆயுதத்தைக் கண்டு கார்க்கி வெறுப்படைந்திருந்தாள். ஆகவே தனது அத்தைப் பாட்டியைப் பார்க்கப் போகும்பொழுது அவளுடைய கருத்து ரொம்ப தூரம் மாற்றமடைந்திருந்தது. தன்னைப் பார்க்க வந்த கார்க்கியைத் தழுவி நெற்றியிலே முத்தமிட்டு, அவளுடைய சுகக்ஷேமங்களை விசாரித்தாள் லோபா.
“நான் விதேகத்திலிருந்து வருகிறேன் பாட்டி.”
“அங்கே குஸ்தி போடப் போயிருந்தாயா மகளே?”
“ஆம். குஸ்திதான் நடந்தது பாட்டி. இந்த பிரமவாதிகளின் சபை குஸ்தியைவிட மேலானதல்ல. குஸ்திக்காரர்களைப் போலவே, இவர்களும் எதிரிகளைத் தந்திரத்தாலும் சரீர பலத்தாலும் தோற்கடிக்கவே விரும்புகிறார்கள்.”
“குரு பாஞ்சாலத்தின் பிரமவாதிகள் எல்லோருமே கோதாவில் குதித்திருப்பார்களே?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 136, புத்தகங்கள், அவளுடைய, யக்ஞவல்க்கீயன், அவள், கார்க்கி, பக்கம், இன்னும், லோபா, வால்காவிலிருந்து, அவன், கங்கை, அவனுடைய, பாட்டி, பிரவாஹனின், சிறந்த, பாஞ்சாலத்தின், உத்யான, வனத்திலே, அறுபது, காலத்தில்