வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 121
கருத்துக்களை நிறைவேற்ற முடியாமல் நம்பிக்கை இழந்துபோய் நின்ற காலத்தில், இந்தப் புரோகிதர்கள் தங்கள் கவிதைகளால் மட்டுமல்ல, கன்னிகைகளைக் கொண்டும் என்னைக் கட்டுப்படுத்த முயன்றார்கள். இந்திராணியையும், அவளுடைய தாசி (வேலைக்காரி) களையும் உண்மையாக வைத்துக் கவிதை பாடியது மட்டுமல்ல. நூற்றுக்கணக்கான தாசிகளைப் புகுத்தி, என்னை இந்திரனாகவே ஆக்கி விட்டார்கள். திவோதாஸின் வீழ்ச்சியிலிருந்து நீ பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் மகனே! முயற்சி செய், உனக்காவது இந்தக் கொடுமைகளை அகற்ற ஏதாவது வழி பிறக்கட்டும். ஆனால் ஜாக்கிரதை! சுதாஸன் போன்ற நல்லெண்ணம் படைத்த தலைவனை ஒதுக்கிவிட்டு, பிரதர்தன் போன்ற இதயமற்ற வஞ்சகனைப் பாஞ்சால தேசத்து அரசனாக்கும் முயற்சிக்கு இடம் கொடுத்து விடாதே. நான் பிதுர்லோகத்திலிருந்து கொண்டு, உன்னுடைய முயற்சி வெற்றிபெற வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறேன்.”
4
திவோ தாஸ் மாண்டுவிட்டான். சுதாஸ் இப்பொழுது பாஞ்சாலத்தின் அரசன். மகரிஷிக் கும்பல் இப்பொழுது அவனுடைய புகழை ஓதிக் கொண்டிருக்கின்றன. இந்திரன், வருணன், அக்கினி, சோமன் முதலிய தெய்வங்களின் பெயரால் இந்த வெள்ளைத் தாடிகள் ஜனங்களை எவ்வளவு இருட்டிலே அழுத்தி வைத்திருக்கிறார்களென்பது இப்பொழுது தான் சுதாஸு க்குப் பூரணமாகத் தெரிந்தது. அவர்களுடைய இறுக்கிய பிடியில் தான் முற்றிலும் அகப்பட்டுக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்திருந்தான். எந்த ஜன சமூகத்துக்காக அவன் ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டானோ,
அந்த ஆரிய சமூகம் அவனுடைய கருத்துக்களைத் தவறாகப் புரிந்துகொண்டு, அவனை மதத் துரோகி என்று விளம்பரப்படுத்தத் தயாராயிருந்தது. வெறுங்காலுடனும், கிழிந்த துணியுடனும், முன்பின் தெரியாத அன்னிய தேசங்களிலே சுற்றிக் கொண்டிருந்த அந்த நாள் அவன் நினைவிற்கு வந்தது. அக்காலத்தில் அவன் இப்போது இருப்பதைக் காட்டிலும் அதிக சுதந்திரமுள்ளவனாக இருந்தான். சுதாஸினுடைய ஆத்ம வேதனையை உணர்ந்தவர்களோ, அவனிடத்து அனுதாபம் செலுத்துகிறவர்களோ இங்கே ஒருவர் கூட இல்லை. புரோகிதர்களும் மகரிஷிகளும் அவனிடம் தங்களின் வாலிபப் பேத்திமார்களையும், அழகிய யுவதிகளையும் அனுப்பிக் கொண்டே இருந்தனர். சேனைத் தலைவர்களோ தங்களின் இளங்குமரிகளால் அரண்மனையின் அந்தப்புரத்தை நிரப்பினர். ஆனால் சுதாஸ் நெருப்பின் மத்தியிலே வாழ்வதாக உணர்ந்தான். சந்திர பாகா நதிக்கரையிலிருந்து அவனது வருகையை எதிர்பார்த்திருக்கும் அந்த நீலக் கண்களை அவனால் மறக்க முடியவில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 121, புத்தகங்கள், அவன், இப்பொழுது, பக்கம், அந்த, கங்கை, வால்காவிலிருந்து, அவனுடைய, தான், தங்களின், சுதாஸ், வேண்டும், வேண்டுமென்று, சிறந்த, நான், மட்டுமல்ல, முயற்சி, ஏதாவது