அர்த்தமுள்ள இந்துமதம் - பக்தியில் கலந்திருக்கும் மருத்துவம்
மயிலை கபாலீசுவரர் கோயிலில் ஒருநாள் பேசி விட்டு வந்தேன். அன்றிரவு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பிராமணரும், அவரது மனைவியும் என்னைத் தேடி வந்து, `தேவர் மண்டபத்தில்’ சந்தித்தார்கள்.
நானே உடல் நலமில்லாமல் தான் உட்கார்ந்திருந்தேன்.
தன் மனைவிக்கு அதிசயமான ஒரு வியாதி இருப்பதாகவும், தன் மனைவியைக் கண் போல் காத்து வந்த ஒரே மகள், திடீரென்று இரண்டு மாதங்களுக்கு முன் இறந்து விட்டதாகவும், அந்த பிராமணப் பெரியவர் கண் கலங்கக் கூறினார்.
அவர் சொன்ன வியாதி என்ன தெரியுமா?
அந்த அம்மையார் உட்கார்ந்திருக்கும் போது மெதுமெதுவாக மேலே போவது போல் தோன்றுகிறதாம்! திடீரென்று தன் கணவனையோ, மற்றவர்களையோ கூப்பிட்டுத் தோள்களை அமுக்கச் சொல்கிறாராம்; இப்படி அடிக்கடி தோன்றுகிறதாம்.
அவர் சொன்னார்:
`ஐயா! நான் கடமை தவறாத பிராமணன். அரசாங்கத்தில் பெரிய அதிகாரி. பகவான் என்னை இப்படிச் சோதிக்கிறான்! கடவுளுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்?’
நான் சொன்னேன்:
`இதைத்தான் இறைவனின் லீலை என்கிறார்கள். ஏற்றுக் கொண்டு அடுத்தக் கட்டத்தை எதிர்பார்ப்பதைத் தவிர நம்மால் ஆவதென்ன?’
அவர் திருப்தியடையவில்லை.
கடையிசியில் பூர்வ ஜென்ம பாவ புண்ணிய கர்மாவைக் கூறி, அவரை அமைதிப்படுத்தினேன்.
எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் ஒரு விசித்திரமான நோய் உண்டு.
பல மாடிக் கட்டடத்தில் ஏறிச் சுவரோரத்தில் நின்று பார்த்தால், கீழே குதிக்க வேண்டும் போல் தோன்றும்.
ஆங்கிலத்தில் `வெர்டிகோ’ என்றும், தமிழில் `கிறுகிறுப்பு’ என்றும் சொல்கிறார்களே அது அல்ல இது.
இது ஒருவகை மனநோய்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென்று அழுகை வரும்.
`தற்கொலை செய்து கொள்ளலாமா?’ என்று தோன்றும்; சிலருக்கு அப்படி ஒரு நோய்.
ஆங்கிலத்தில் அதன் பெயர், `சிசோம்பிரினியா!’
நம்முடைய மூதாதைகளான ராஜராஜசோழன் காலத்திலோ, ராஜேந்திர சோழன் காலத்திலோ இந்த நோய்களெல்லாம் இருந்தனவா?
குதிரை ஏற்றம், வாள் பயிற்சி, மல்யுத்தம், நூற்றைம்பது படிக்கட்டுகள் மலையில் ஏறுதல், இயற்கையை வைத்தியனாகக் கொண்டு அவர்கள் வாழ்ந்தார்கள்.
இப்போதெல்லாம் அதிகக் கனமாக இருந்தால், `எடையைக் குறை’ என்கிறார்கள்.
நம்முடைய மூதாதையர்கள் எல்லாம் குண்டாகத்தான் இருந்து, எண்பது வயது வரை வாழ்ந்தார்கள்.
இன்று பரவலாகக் காணப்படும் நோய், மாரடைப்பு.
ஆயிரத்தில் ஒருவருக்கு அபூர்வமாக அந்த நாளில் வரும் மாரடைப்பு, இப்போது சர்வசகஜமாகி விட்டது.
ஒவ்வொரு மனிதனும் தபால்காரனை எதிர்பார்ப்பது போல், `நமக்கு எப்போது வருமோ’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.
விசித்திரமான நோய்கள் விபரீதமாகப் பெருகிவிட்ட காலம் இது.
காரணம், நாகரிகத்தின் வசதிகள் மட்டுமல்ல; தெய்வ பக்தி இல்லாமையுங் கூட.
இதைப் படிக்கின்ற உங்களில் எத்தனை பேர், தினசரி பூஜை செய்கிறீர்கள்?
எத்தனை பேர் கோயிலை நூற்று எட்டு முறை பிராகாரம் சுற்றி வருகிறீர்கள்?
எத்தனை பேர் மலை ஏறிச் சாமி கும்பிடுகிறீர்கள்?
எத்தனை பேர் குளத்தில் மூழ்கி நீராடி, ஈரத்துண்டோடு காட்டிலே நடக்கிறீர்கள்?
எந்தக் கோயிலின் அர்ச்சகராவது, சர்க்கரை வியாதிக்கு ஆளாகி இருக்கிறாரா?
உடம்பு வியாதி வந்து, கை, கால் வீங்கி இருக்கிறாரா?
எந்த அர்ச்சகராவது எழுபது வயதுக்கு முன்னால் செத்திருக்கிறாரா?
அவர்களில் எவராவது கொழுப்படைத்துச் செத்தது உண்டா?
இத்தனைக்கும் `அக்கார அடிசில்’ என்னும் சர்க்கரைப் பொங்கலை, நெய் வடிய ஒரு படி சாப்பிடுகிறவர்!
நோய் இல்லாத காரணம் என்ன?
அவர் தினசரி தெய்வத்தைச் சந்திக்கிறார் என்பது ஒன்று; காற்றில்லாத மூல ஸ்தானத்தில் தினமும் நிற்பதால் உடம்பிலுள்ள உப்பும், சர்க்கரையும் வியர்வையில் வெளியேறி விடுகின்றன என்பது மற்றொன்று.
இந்து மதத்தின் பக்தித் தத்துவத்தில் மருத்துவமும் கலந்திருக்கிறது.
நிவேதனப் பொருட்களை மட்டுமே சாப்பிட்டு ஒருவன் வாழத் தொடங்கினால், தெய்வம் வாழும் காலம் வரை அவனும் வாழ்வான்.
நாட்டில் எவ்வளவோ மூலிகைகள் இருக்கின்றன. ஆனால், துளசி தலத்துக்கென்ன அவ்வளவு மரியாதை? அதை ஏன் வீட்டிலே பூஜிக்கிறார்கள்? கோயிலிலே கொடுக்கிறார்கள்?
அது பல நோய்களைக் கண்டிக்கிறது.
அண்மையில் ஒரு பத்திரிகையில் துளசியின் மகிமை பற்றி ஒரு கட்டுரை வந்தது. அது ஒரு `சர்வரோக நிவாரணி’ என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டது.
மாரியம்மனை வணங்கும்போது, வேப்பிலை ஏன் பிரதானமாகிறது?
அது மற்றொரு நிவாரணி.
`அலர்ஜி’ என்றொரு வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு.
சிலருக்கு வாசனை `அலர்ஜி,’ சிலருக்கு காய்கறி அலர்ஜி என்று பலவகையான அலர்ஜிகள் உண்டு.
கோயிலுக்குள் எந்த வாசனை வந்தாலும், `அலர்ஜி’ கிடையாதே ஏன்?
`அந்த நோயாளிக்கு இவர் விபூதி கொடுத்தார்; நோய் தீர்ந்து விட்டது’ என்கிறோம்.
அது சாமியாரின் மகத்துவமல்ல; விபூதியின் மகத்துவம்.
நோய் வரக்கூடாது.
வந்த பின் என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்ல வேண்டியது.
வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே நான் சொல்ல வேண்டியது.
முதலில் நடக்கப் பழகுங்கள்.
திருமலைக்குப் போனாலும் சரி; பழனிக்குப் போனாலும் சரி; நடந்தே மலை மீது ஏறுங்கள்.
`கார் போகுமா? விஞ்ச் கிடைக்குமா?’ என்று கேள்வி கேட்காதீர்கள். நடக்க இயலாதவர்கள் அவற்றிலே போகட்டும்.
நடக்கக் கூடியவர்கள் நடந்து செல்லுங்கள்.
ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நமக்குக் கிடைத்த சுப்ரீம் டாக்டர், ஆண்டவனே.
இளைஞர்கள் எல்லாம் கோயில்களில் அங்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.
அதை விடவா ஒரு உடற்பயிற்சி யோகாசனம் உண்டு?
காவடி எடுத்து ஆடுகிறார்களே, ஏன்?
அவர்களுக்குப் பரத நாட்டியம் தெரியாது; உடம்பில் சகல அம்சங்களும் வளைவதில் ஒரு ஆரோக்கியம்.
உடம்பையும், ஆன்மாவையும் ஒரு சேரக் கவனிக்கும் மதம் இந்து மதம்.
அது நீராடச் சொல்லுவது, உடம்பைக் காக்க.
தெய்வத்தை நம்பச் சொல்லுவது, ஆன்மாவைக் காக்க.
ஆன்மாவுக்குள்ளே, ஆண்டவன் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறான்.
இருபது வயதில் இருந்தே ஒருவனுக்குக் கோயிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
பணக்காரன் உடம்பு நாளுக்கு நாள் பலவீனமடைகிறது.
பரதேசியின் உடம்போ, எப்போதும் பாதுகாக்கப்படுகிறது.
பல வீட்டுச் சோறு செய்கிற வேலையை, திட்டமிட்ட சாப்பாடு செய்ய முடியவில்லை.
காரணம் என்ன?
பரதேசியின் உடம்பு நடக்கிறது; ஆன்மா ஆண்டவனை நினைக்கிறது.
பணக்காரன் உட்கார்ந்து உட்கார்ந்து கணக்கு எழுதுகிறான்; ஒப்புக்காகக் கோயிலுக்குப் போகிறான்.
மொத்தத்தில் நம்மிடமுள்ளது இரண்டே விஷயங்கள் தான்:
ஒன்று தேகம்.
இன்னொன்று ஆன்மா.
வடமொழியில் `புருஷன்’ என்றால் ஆன்மா.
நீ உன் மனைவிக்கு மட்டுமே புருஷனல்ல; உன் தேகத்துக்கும் புருஷன்.
தேகம் என்று மனைவியையும், `ஆன்மா’ என்ற புருஷனையும் ரோகம் இல்லாமல் காப்பாற்றுவது, இந்து மதம் ஒன்றே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - பக்தியில் கலந்திருக்கும் மருத்துவம், என்ன, நோய், புத்தகங்கள், வேண்டும், போல், உண்டு, அவர், நான், எத்தனை, செய்ய, பேர், மதம், ஆன்மா, இந்து, உடம்பு, பக்தியில், ஆங்கிலத்தில், காரணம், சிலருக்கு, அர்த்தமுள்ள, இந்துமதம், வியாதி, திடீரென்று, கலந்திருக்கும் , அந்த, மருத்துவம், வாசனை, `அலர்ஜி&, கட்டுரை, ஒன்று, சிறந்த, எந்த, என்பது, மட்டுமே, போனாலும், பரதேசியின், உட்கார்ந்து, தேகம், பணக்காரன், காக்க, வேண்டியது, இருக்கிறாரா, சொல்லுவது, சொல்ல, நோய்கள், தோன்றும், மனைவிக்கு, என்றும், வரும், ஏறிச், வந்த, தோன்றுகிறதாம், என்கிறார்கள், கொண்டு, விசித்திரமான, தான், நம்முடைய, வந்து, வயது, போது, தினசரி, காலம், மாரடைப்பு, காலத்திலோ, வாழ்ந்தார்கள், எல்லாம், அர்ச்சகராவது