அர்த்தமுள்ள இந்துமதம் - பெண்களை பெருமைப்படுத்துவோம்
ஒரு ஏழைப் பெண், தான் குங்குமம் வைப்பதற்கே கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கிறது.
கழுத்திலே ஒரு பொட்டுத் தாலியைக் கட்டிக் கொள்வதற்குத் தாய் தகப்பனைக் கசக்கிப் பிழிய வேண்டியிருக்கிறது.
கூன், குருடு, செவிடு, நொண்டிக்காவது வாழ்க்கைப்பட்டு, `சுமங்கலி’ என்ற பெயரோடு சாவதற்கு இந்துப் பெண் ஆசைப்படுகிறாள்.
ஆனால், அதற்கும் விலை தேவைப்படுகிறது.
நடுத்தரக் குடும்பத்தில் பிரச்சினைகளிலெல்லாம் பெரிய பிரச்சினை, மகளே!
எங்கள் சமூகத்தில் மகளைத் திருமணம் முடித்துக் கொண்டு விடுவதோடு தகப்பன் கவலை தீர்ந்து விடுவதில்லை.
தீபாவளி வந்தாலும், பொங்கல் வந்தாலும், மகள் பிரசவித்தாலும் அவன் பணம் தேட வேண்டியிருக்கிறது.
இல்லையென்றால், `உன் அப்பன் என்னடி கொடுத்தான்?’ என்று மாமியார் கன்னத்தில் இடிக்கிறாள்.
கட்டிக்கொண்ட கணவனோ கல்லுப் பிள்ளையார் மாதிரி இருக்கிறான்!
அவனுக்குச் சுயதர்மமும் தெரியாது; சுயகர்மமும் புரியாது.
`எனக்கு மனைவிதான் தேவை; மாமனார் வீட்டு சீர்வரிசை அல்ல!’ என்று சொல்லக்கூடிய ஆண் மகனாக அவன் பெரும்பாலும் இருப்பதில்லை.
`அடியம்மா! கதையைக் கேட்டாயா? அண்ணன் மனைவிக்கு சம்பந்தி வீட்டார், போட்ட சங்கிலி காற்றிலே பறக்கும்,’ என்று நாத்தனார் கேலி செய்கிறாள்.
ஒரே வீட்டில் ஒரு மருமகள் ஏழையாகவும், இன்னொரு மருமகள் பணக்காரியாகவும் வந்து விட்டால், அந்த ஏழை மருமகள் படும்பாட்டை இறைவன் கூடச் சகிக்கமாட்டான்.
இந்துக்களின் துயரங்களிலெல்லாம் பெரிய துயரம் இந்தத் துயரமே.
சனாதன வைதிக இந்துக்கள் கூட இதில் கருணை உள்ளவர்களாக இல்லை.
சீதையை ராமன் மணந்ததும்,
ருக்மிணியைக் கண்ணன் மணந்ததும்,
-சீர்வரிசைகளுக்காக அல்ல.
வள்ளி, தெய்வானையிடம் உமா தேவியார் என்ன சீர்வரிசைகளா கேட்டார்கள்?
அகலிகை என்ன கொண்டு வந்தாள், முனிவரின் ஆசிரமத்திற்கு?
`நாளை உதயமாகக் கூடாது’ என்று சூரியனுக்கே கட்டளையிட்ட நளாயினி, கற்பென்னும் அணிமணிகளை மட்டுமே அணிந்திருந்தாள்.
தேவர்களைக் குழந்தைகளாக்கிய அனுசூயையின் கழுத்தில் திருமாங்கல்யம் மட்டுமே பிரகாசித்தது.
இந்து வேதம் படிக்கிறான்; புராணம் படிக்கிறான்; இதிகாசம் படிக்கிறான்.
மகனுக்குப் பெண் தேடும் போது, மனிதாபிமானத்தையே இழந்து விடுகிறான்.
ஊரில் நடக்கும் திருமணங்களை எல்லாம் பார்த்தபடி உள்ளுக்குள் குமுறும் இந்துப் பெண்கள் எவ்வளவு பேர்?
பையன் பட்டப் படிப்புப் படித்து விட்டான் என்பதற்காக, `ஸ்கூட்டர் கொடு; பங்களா கொடு’ என்று வம்பு செய்யும் மாமன்மார் எத்தனை பேர்?
இந்து சமூகத்தில் புரையோடிவிட்ட இந்தப் புற்று நோயை இளைஞர்கள் களைந்தாக வேண்டும்.
அழகான ஒரு அனுசூயையைத் தேர்ந்தெடுப்பதே அவனுடைய பணியே தவிர, ஸ்கூட்டருக்காகவும், வரதட்சிணைக்காகவும் எந்த அலங்கோலத்திலும் சிக்கிக் கொள்வதல்ல.
`ஒரு பெண் புக்ககம் வருகிறாள் என்றால், ஒரு தெய்வம் அடியெடுத்து வைக்கிறது’ என்று பொருள்.
`தெய்வமே வைர நகைகளோடு வந்தாக வேண்டும்’ என்று ஒரு நல்ல இந்து கேட்க மாட்டான்.
கற்புடைய ஒரு பெண்ணைவிட, அவள் அணிந்து வரும் நகைகள் விலையுயர்ந்தவையல்ல.
அழகான புள்ளிமானிடம் கவிஞன், கலையைத்தான் எதிர்பார்க்க வேண்டுமே தவிர மாமிசத்தையல்ல!
பையனைப் படிக்க வைக்கும்போதே, தான் செய்யும் செலவுகளையெல்லாம் சம்பந்தியிடம் வட்டி போட்டு வசூலிப்பது என்று தகப்பன் முடிவு கட்டிக் கொள்கிறான்.
அதை ஒரு தார்மிகப் பெருமையாகவும் கருதுகிறான்.
இந்து தர்மத்தின் முழு ஆதார சுருதியையும் அவன் அங்கேயே அடித்துக் கொன்று விடுகிறான்.
அவன் திருநீறு பூசுகிறான்; திருமண் இடுகிறான்; ஒரு மணி நேரம் பூஜையில் அமர்கிறான்; உலக க்ஷேமத்துக்காக பிரார்த்திக்கிறான்; வீட்டில் இருக்கிற சாமி சிலைக்குக் கூட வைர நகை செய்து போட்டு அழகு பார்க்கிறான்; ஆனால், மருமகளைத் தேர்ந்தெடுக்கும் போது மட்டும் அவன் யூத வியாபாரியாகி விடுகிறான்.
கண்ணைப் பறிக்கின்ற அழகு- கடவுளே மதிக்கின்ற கற்பு- ஆனால், அவளோ ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பிறப்பு.
அந்த இரண்டு அற்புதமான குணங்களுக்காக ஒரு பணக்காரன் அவளை கட்டிக்கொள்ள முன் வரவில்லையே?
ஒரு அனாதைக்கோ, தற்குறிக்கோ அல்லவா அந்தத் தெய்வப் பெட்டகம் போய்ச் சேருகிறது?
பொருளாதாரம் பெண்ணின் வாழ்வோடு விளையாடுவதை, இளைஞர்கள் தடுக்க வேண்டும்.
`உத்தியோகம் பார்க்கின்ற பெண் எனக்கு வேண்டும்’ என்று ஒரு இந்து இளைஞன் கேட்பது எனக்குப் புரிகிறது.
அந்தப் பொருளாதாரத்தில் அடிப்படை நியாயம் இருக்கிறது.
`நான் படித்திருக்கிறேன்! நாற்பதாயிரம் வேண்டும்’ என்பது தான் எனக்குப் புரியவில்லை.
துர்ப்பாக்கிய வசமாக ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்குமே குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன.
அதிலும் வறுமை மிக்க இல்லங்களில் இறைவன் பெண்ணாகவே படைத்துத் தள்ளுகிறான்.
அவன் இந்துக்களை ஆத்ம சோதனை செய்கிறான்.
`பிரமாத தத்துவம் பேசும் நீங்கள் என் சிருஷ்டியை எப்படி மதிக்கிறீர்கள்? பார்க்கிறேன்!’ என்று சவால் விடுகிறான்.
நாம் ஒருபோதும் அவனது சவாலை ஏற்றுக் கொண்டதில்லை.
ஒரு கையில் தராசையும், ஒரு கையில் பையையும் வைத்துக் கொண்டுதான் பெண்ணைத் தேடுகிறோம்.
நமக்கு வருகிற வியாதிக்கெல்லாம் காரணம், இதுவே.
பெண்ணை மாமியார் வீட்டுக்கு வழியனுப்பும் போது பெற்றோர் கண்ணீர் வடிக்கிறார்களே, ஏன்?
`திருமணத்திற்கு முன் இவ்வளவு பாடுபடுத்தினார்களே, திருமணத்திற்குப் பின் என்ன செய்வார்களோ…?’ என்று அஞ்சுகிறார்கள்.
என்னையே எனது ஒரு பெண்ணின் திருமணத்தில் அழ வைத்திருக்கிறார்கள்.
`இவர் கவிஞராயிற்றே, கவியரசாயிற்றே’ என்ற மரியாதையெல்லாம் இந்த விஷயத்தில் கிடையாது.
பெண்ணைப் பெற்றவன், கண்ணீர் விட்டே ஆக வேண்டும்; அவ்வளவுதான்.
`பாரதத்தில் ஒருமுறைதானா குருக்ஷேத்திரம் நடந்தது?’
நாம் ஒவ்வொருவரும் குருக்ஷேத்திரம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
எனக்கு நெருங்கிய நண்பராக இருந்த எழுத்தாளர் காலமானார்; அவருக்கு நான்கு பெண்கள்.
அவர் உயிருடன் இருக்கும்போதே ஒருத்திக்கு முப்பத்தி நான்கு வயது; ஒருத்திக்கு முப்பது வயது; ஒருத்திக்கு இருபத்தி ஆறு வயது; ஒருத்திக்கு இருபது வயது.
ஒருத்திக்கும் திருமணம் ஆகவில்லை.
இங்கே கலப்புத் திருமணத்திற்குத் தங்கப் பதக்கம் கொடுக்கிறார்களாம்!
இந்தக் கொடுமையில் இருந்து சமுதாயம் மீள வேண்டும்.
இது வெறும் வாதப் பிரதி வாதங்களால் நடக்கின்ற காரியமல்ல.
`இறைவா! எனக்கு ஒரு சீதையைக் கொடு; அனுசூயையைக் கொடு; கோலார் தங்கச்சுரங்கம் வேண்டாம்’ என்று பிரார்த்திக்க வேண்டும்.
`நான் வரதட்சிணை வாங்காதவன்’ என்பதே ஒரு இந்து இளைஞனின் பெருமையாக இருக்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - பெண்களை பெருமைப்படுத்துவோம், இந்து, வேண்டும், அவன், புத்தகங்கள், பெண், வயது, விடுகிறான், ஒருத்திக்கு, மருமகள், வேண்டும்&, பெண்களை, போது, கொடு, படிக்கிறான், என்ன, எனக்கு, தான், கண்ணீர், வேண்டியிருக்கிறது, இந்துமதம், அர்த்தமுள்ள, பெருமைப்படுத்துவோம், நான்கு, செய்யும், இளைஞர்கள், அழகான, தவிர, முன், பெண்ணின், `நான், நாம், அழகு, குருக்ஷேத்திரம், கையில், போட்டு, எனக்குப், மணந்ததும், பெரிய, சமூகத்தில், திருமணம், நடுத்தரக், இந்துப், சிறந்த, ஏழைப், கட்டிக், கொண்டு, தகப்பன், இறைவன், மட்டுமே, பெண்கள், அந்த, வீட்டில், வந்தாலும், மாமியார், அல்ல, பேர்