அர்த்தமுள்ள இந்துமதம் - பட்டினத்தாரிடம் இறைவன் நடத்திய லீலை
அப்போது நான் பாடினேன்:
துள்ளித் திரியும் பருவத்திலே என் துடுக்கடக்கி
பள்ளிக்கு அனுப்பிலனே என் தந்தையாகிய பாதகனே! …. என்று.
எங்கள் பரம்பரைக்கே கல்வி பாக்கியம் இல்லை என்று நான் முடிவு கட்டினேன்.
சொத்துக்களையாவது பையன் காப்பாற்றட்டும் என்று கருதினேன். ஒரு நாள் கடைக்குக் கூட்டிக் கொண்டு போனேன்.
அங்கே அவன் ஒரு மாணிக்கத்தை எடுத்து, `அப்பச்சி, இதை நெருப்பிலே போட்டால் என்னவாகும்?’ என்று கேட்டான்.
`சாம்பலாகும்’ என்றேன்.
`காய்ந்த எரு முட்டையை நெருப்பிலே போட்டால்’ என்றான்.
“அதுவும் சாம்பலாகும்” என்றேன்.
கணக்கு எழுதச் சொன்னேன்.
“முப்பதிலே நாற்பது போனால் எவ்வளவு?” என்று என்னையே கேட்டான்.
“நாற்பது எப்படியடா போகும்?” என்றேன்.
“போகும்” என்றான்.
“போனால் என்ன வரும் தெரியுமா?”
“என்ன வரும்?” என்றான்
நான் பேசாமல் இருந்து விட்டேன்.
இந்தப் பிள்ளை தேறாது என்று முடிவு கட்டினேன். சொத்துக்களைப் பத்திரப்படுத்தத் தொடங்கினேன்.
“பையனைக் கடல்கடந்து அனுப்பினால், வாணிபத்தில் புத்தி வரும். சொத்துக்களைக் காப்பாற்றும் ஆசை வரும்” என்று என் ஆத்தாள் சொன்னார்கள்.
என்னுடைய தனிக்கப்பலில் அவனைக் கடாரத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். அவனுக்கு அதிலே மிகவும் மகிழ்ச்சி.
“அப்பச்சி, கடாரத்திலே இதுவரை நீங்கள் கொள்முதல் செய்யாத பொருளெல்லாம் நான் கொள்முதல் செய்வேன்!” என்று சூளுரைத்தான்.
“மகனே, அதைத்தானடா உன்னிடம் எதிர்பார்க்கிறேன்” என்று தட்டிக் கொடுத்தேன்.
கப்பலில் அவனை ஏற்றியபோது அவன் பேசிய பேச்சுக்கள், வயது வந்த செட்டிப் பிள்ளையின் அனுபவ ஞானமே அவனுக்கு இருப்பதாகக் காட்டின.
“அப்பத்தாளைக் கவனித்துக் கொள்ளுங்கள் அப்பச்சி!” என்றான். “ஆத்தாள் மோர் ஊற்றிக் கொள்ளக் கூடாது!” என்றான்.
அப்பப்பா! கடல் கடந்து போகிறோம் என்றவுடன் அவனுக்கு வந்த பாசமும், பரிவும், என்னையே திகைக்க வைத்தது.
எண்பத்தியாறு நாட்களுக்குப் பிறகு என் மகனை என் கப்பல் சுமந்து வந்தது.
சுட்டிப் பிள்ளையாகப் போன அவன், இப்போது சிவபக்தனாகத் திரும்பி இருந்தான்.
கப்பலில் நான் வைத்திருந்த திருநீற்றையெல்லாம் அவன் நெற்றிதான் தாங்கிக் கொண்டிருந்தது!
கப்பலில் இருந்து ஒரு சிறு கைப்பெட்டியோடு இறங்கி வந்த அவன், “அப்பச்சி! பணியாட்களை விட்டு செல்வங்களை எல்லாம் இறக்கச் சொல்லுங்கள்; நான் அப்பத்தாளைப் பார்க்கப் போகிறேன்!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
அவன் போனதும், நானே முன்னின்று அனைத்தையும் இறக்கச் சொன்னேன்.
அன்று பெட்டி பெட்டியாக இறக்க வேண்டிய பொருள்கள், மூட்டை மூட்டையாக இறங்கின.
தங்கத்தையோ, நவமணிகளையோ, மூட்டை கட்டக் கூடாதே!
ஒரு மூட்டையை நான் பிரித்துப் பார்த்தேன். உள்ளே எல்லாம் எரு முட்டைகள். தவிட்டு உமிகள்!
எனக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. ஒரு மூட்டையை அப்படியே தூக்கச் சொல்லி வீட்டுக்குப் போகச் சொன்னேன்.
ஆத்திரத்தோடு அவனைத் தேடினேன்.
அதிசயமாக எனக்கு ஆத்திரம் வந்ததைப் பார்த்த என் ஆத்தாள், “என்ன ஐயா! ஏன் இந்தப் பதற்றம்?” என்றார்கள்.
“ஆத்தா! உன் பேரன் கொள்முதல் செய்த செல்வத்தைப் பார்த்தாயா?” என்று சினத்தோடு மூட்டையைக் காலால் உதைத்தேன்.
ஒரு மூட்டை பந்து போல் எழுந்து சுவரில் மோதி விழுந்து உடைந்தது.
நான் திகைத்தேன்; திணறினேன்; உள்ளே அத்தனையும் நவமணிகள்.
கொட்டிக்கிடந்த தவிட்டு உமிகள் வெறும் உமிகள் அல்ல, தங்க உமிகள்!
எனக்கு ஆனந்தம் தாங்கவில்லை; ஒரே கப்பலில் கோடிக் கணக்கில் செல்வம் வந்துவிட்டது; சொத்து குவிந்து விட்டது.
ஆசையோடும் பாசத்தோடும், “மகனே! மகனே!” என்று அவனைத் தேடினேன்.
உடனே என் ஆத்தாள், அவனது கைப்பெட்டியை என்னிடம் கொடுத்து, “இதோ பாரப்பா! அது மருக்கொள்ளிப்பிள்ளை! `அப்பத்தா, அப்பச்சி வந்ததும் இதைக் கொடுத்துவிடு! என்னை இனித் தேட வேண்டாம் என்று சொல்லிவிடு’ என்று சொல்லிவிட்டு போய்விட்டது!” என்றார்கள்.
`மறுபடியும் இது என்ன மாயவேலை?’ என்று எண்ணியவாறு நான் அந்தக் கைப்பெட்டியைத் திறந்து பார்த்தேன்.
உள்ளே ஒரு காதற்ற ஊசியும், ஓர் ஓலை நறுக்கும் இருந்தன.
அந்த ஓலை நறுக்கில், “காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே” என்று எழுதப் பெற்றிருந்தது.
என் மாளிகை என் கண் முன்னே சுழன்றது.
அதில் இருந்து பொடிப்பொடியாக மாணிக்கங்கள் உதிர்ந்தன. என் தாயார் சக்தி போல தோற்றமளித்தார்கள். கந்தன் போலவே என் மகன் கற்பனையில் தோன்றினான். கைலயங்கிரியில் ருத்திர தாண்டவம் நடப்பது போல கண்ணுக்குத் தெரிந்தது.
அது வரையில் எவ்வளவோ கண்டிருந்த எனக்கு, மிகச் சாதாரணமாகத் தெரிந்திருக்க வேண்டிய விஷயம் தெரியவில்லையே?
“மகனே…!” என்றழைக்க நா எழுந்தது. `அம்மையே அப்பா’ என்றுதான் வார்த்தை வந்தது.
எனக்கு ஞானம் பிறந்தது.
செல்வத்தின் நிலையாமை, பளிச்சென்று என் கண்களுக்குத் தெரிந்தது.
அங்கிருந்து வீட்டுக்கு ஓடினேன்.
என் இல்லத்தரசி சிவகலையைப் பார்த்தேன்; அந்த உருவம் எனக்குத் தெரியவில்லை; ஒரு எலும்புக்கூடே தெரிந்தது.
கொஞ்சம் திருநீற்றைக் கையில் அள்ளினேன். சாம்பலாகப் போகும் கையோடு அந்தச் சாம்பல் சொந்தம் கொண்டாடிற்று. காயத்தின் நிலையாமையும் அப்போது தான் எனக்குப் புரிந்தது.
“உலகியல் ஆதாரங்கள் எல்லாமே பொய்! பொய்!” என்று யாரோ என் தலையில் அடிப்பது போலிருந்தது.
மனைவி என்றொரு விலங்கு! அவளுக்கு செல்வம் என்றொரு பேராசை!
இவற்றில் எது நிலையானது?
மாடத்தின் மீது ஏறித் திறந்தவெளி மாடத்துக்குப் போனேன். புகார் நகரத்தை உற்றுக் கவனித்தேன்.
என் பொருள் எங்கே என்று கேட்பவனும் கையைத்தான் நீட்டுகிறான்; யாசிப்பவனும் கையைத்தான் நீட்டுகிறான்.
கோடி வராகனுக்குச் சொத்துள்ளவனும் ஓடி ஓடித் தேடுகிறான். கும்பியை நிரப்பக் கூழுக்கு அலைபவனும் ஓடி ஆடுகிறான்.
பொய் பேசும் வணிகன்தான் பொருளைக் குவிக்கிறான்; உண்மையே பேசுகின்றவன் உருப்படாமல் போகிறான்.
மனைவிக்குக் காவல் என்று சொத்து; சொத்துக்குக் காவல் என்று மனைவி.
இந்த கொண்டாட்டத்தில் பிள்ளையோ, பிள்ளை; பொருள் அற்றுப் போனாலோ குடும்பத் தொல்லை; ஓடி விடலாம் என்றாலோ பாசம் போடுகிறது எல்லை. ஆப்பு அசைத்த குரங்கல்லவா மனிதன்?
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி,
நலனொன்று மறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவு மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையிற்
கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை யசைத்துவிட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே!
கடல் அலைகள் நகரத்தை மோதுவதைக் கண்டேன்.
மோதுகின்ற அலைக்கு ஆசை வெறி; திரும்பிப் போகும் அலைக்கு ஞான வெறி.
நான் திரும்பிப் போக விரும்பினேன்.
எனது சமுதாய தர்மம் பூர்த்தியாகி விட்டதாகக் கருதினேன். மனைவிக்கு மகிழ்ச்சி, சொத்து; இனி எனக்கென்ன கடமை?
நான் என் சுய தர்மத்தில் இருந்து தப்பி ஓடி விட்டதாக யாரும் சொல்ல முடியாது.
நான் துறவியாக முடிவு கட்டினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - பட்டினத்தாரிடம் இறைவன் நடத்திய லீலை, நான், அவன், என்றான், எனக்கு, புத்தகங்கள், உமிகள், என்ன, அப்பச்சி, இருந்து, கப்பலில், ஆத்தாள், கொள்முதல், வரும், பட்டினத்தாரிடம், அவனுக்கு, பார்த்தேன், தெரிந்தது, பொய், சொத்து, உள்ளே, மூட்டை, போகும், வந்த, மகனே, முடிவு, நடத்திய , லீலை, இந்துமதம், அர்த்தமுள்ள, இறைவன், கட்டினேன், என்றேன், சொன்னேன், அலைக்கு, காதற்ற, செல்வம், என்றார்கள், தேடினேன், திரும்பிப், வெறி, காவல், அந்த, நகரத்தை, பொருள், கையைத்தான், என்றொரு, அவனைத், நீட்டுகிறான், மனைவி, ஊசியும், தவிட்டு, கேட்டான், நெருப்பிலே, போனேன், மகிழ்ச்சி, பிள்ளை, போனால், நாற்பது, இந்தப், கருதினேன், கடல், அப்போது, சிறந்த, என்னையே, மூட்டையை, வேண்டிய, வந்தது, எல்லாம், இறக்கச், ஆத்திரம்