அர்த்தமுள்ள இந்துமதம் - நெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி!
விமானத்தின் பறக்கும் உயரத்தையும் வேகத்தையும் கொஞ்சங் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொண்டே போன மனிதன், சந்திரமண்டலம் வரை பயணம் போகலாம் என்ற நம்பிக்கை கொண்டான்.
அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.
பையன் ஒழுங்காகப் படிப்பான் என்ற நம்பிக்கையால் தான், அவனை வெளிரில் படிக்க வைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறார் தந்தை.
மனைவியைப் பிரிந்து வாணிபத்திற்காக வெளிர் போகிறவன், திரும்பி வரும்வரை மனைவி பத்தினியாக இருப்பாள் என்ற நம்பிக்கையில்தான் போகிறான்.
இன்பமும் நிம்மதியும் நம்பிக்கையில்தான் தோன்றுகின்றன.
நான் கடவுளிடம் நம்பிக்கை வைத்தது வீண்போகவில்லை.
அதிலும் ஒருவனையே பற்றி நிற்பது என்ற முடிவு கட்டிக்கொண்டு `சிக்கெனப் பிடித்தேன் தேவனே உன்னை’ என்று கண்ணனைப் பற்றி நிற்பது, பலனளித்தது.
சிலருக்கு சக்தி நம்பிக்கை பலம் தருகிறது.
சிலருக்கு சிவ நம்பிக்கை.
சிலருக்கு முருக நம்பிக்கை.
இன்னும் எத்தனையோ!
நீ நல்ல தொழிலாளியாக இருந்தால், மோசமான முதலாளிகூட உன்னிடம் அன்பு காட்டுகிறான்; கருணை காட்டுகிறான்.
நீ நம்பிக்கையுள்ள பக்தனாக இருந்தால் குட்டித்தேவதைகள் கூட உன்னை ரட்சிக்கின்றன.
துன்பங்களைக் களைவதற்கு நம்பிக்கையே முக்கியம்.
முதன் முதலில் ஒரு பத்திரிகையில் போய் நான் சேர்ந்தபோது, “உனக்கு புரூப் பார்க்கத் தெரியுமா?” என்று கேட்டார்கள். உண்மையில் எனக்குத் தெரியாது.
துணிந்து `தெரியும்’ என்று கூறி விட்டேன்.
அதற்கொன்றும் `டிப்ளமா’ தேவையில்லையே!
நேரே அச்சகத்திற்குப் போனேன்.
முன்பு திருத்தப்பட்ட புரூப்புகளைப் பார்த்தேன்.
உடனே நானும் திருத்த ஆரம்பித்துவிட்டேன்.
அந்தக் கலையில் எனக்கு வெகுநாளாகப் பயிற்சி இருப்பதுபோல் பத்திரிகையாளருக்குத் தோன்றிற்று.
பிறகு, “தலையங்கம் எழுதத் தெரியுமா?” என்றார்கள்.
“தெரியும்” என்றேன்; எழுதிவிட்டேன்!
“அற்புதம்! அற்புதம்!” என்றார்கள்.
அதன் பலன் ஆசிரியருக்கு வேலை போய்விட்டது; நான் ஆசிரியனாகி விட்டேன்!
எதிலுமே நம்பிக்கை பலன் தருகிறது என்றால், அத் துன்பங்களைக் களையத் தெய்வநம்பிக்கை பலன் தராதா?
“நம்பினோர் கெடுவதில்லை; நான்கு மறை தீர்ப்பு” என்றார்கள்.
உண்மையில், நம்பிக்கை என்பது இயற்கையாகவோ செயற்கையாகவோ வெற்றி பெற்று விட்டது போல் தோற்றமளித்து, நிம்மதியைத் தருகிறது.
சீதை இலங்கையிலிருந்தபோது, `ராமன் வருவான்’ என்று நம்பினாள்.
ராமனும், `சீதையைக் காண்போம்’ என்று நம்பினான். ராவணனும் `ராமன் வரத்தான் போகிறான்’ என்று எதிர்பார்த்தான்.
அந்த நம்பிக்கை ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்ததாலே ஏற்பட்ட நம்பிக்கை.
தெய்வத்தை நம்பும்போது அறிந்து நம்பவேண்டும்.
ஏதோ கஷ்டம் வந்துவிட்டது, கோவிலுக்குப் போய் வருவோம் என்று போய் வருவதில் அர்த்தமில்லை.
அறிவு ஒரு சக்தியின் மீது லயித்து நம்பிக்கை உதயமாக வேண்டும்.
அதற்குப் பகுத்தறிவு தேவையில்லை.
`இந்தத் தெய்வம் நம்மைக் காப்பாற்றும்’ என்று உனக்கே தோன்றி, அந்த லயத்தில் நம்பிக்கை பிறக்கவேண்டும்.
உலகத்தில் பகுத்து அறியவேண்டிய விஷயங்கள் சில உண்டு.
அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு.
மனைவியின் உள்ளத்தை நீ பகுத்தறிய முயலலாம்.
உடலைப் பகுத்தறிய முயன்றால், அவள் அழகு தெரியாது. எலும்பும் சதையுந்தான் தோன்றும்.
ஸ்தூலங்களைப் பகுத்தறிந்தால் அவை வெறும் கல்லும் செம்புமாகத் தோன்றும்.
அப்படியே ஏற்றுக்கொண்டால், அந்த சக்தி உன்னை ஆகர்ஷிக்கும்.
நம்பிக்கை கொண்டவர்களை அந்தச் சக்தி எப்படியும் ஒரு கட்டத்தில் வாழவைக்கும்.
மனிதனின் பலவீனமான மனத்தை அறிந்துதான் இந்துக்கள் நம்பிக்கையோடு வழிபடுவதை வற்புறுத்தினார்கள்.
எத்தகைய துயரங்களிலிருந்தும் விடுபடுவதற்கு வழி சொன்னார்கள்.
ஒவ்வொரு சிருஷ்டியிலும் சிக்கல் இருக்கிறது என்பதை முதலில் உணர்ந்துக் கொள்ளவேண்டும்.
அந்தச் சிக்கல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கே ஒவ்வொரு ஜீவனும் வாழ்க்கையை நடத்துகிறது.
ஆகவே, பிரார்த்தனையே ஒரு யோகமாகவும் பயிற்சியாகவும் கொண்டு, நம்பிக்கையை வளர்த்துக் கொண்டே வந்தால், துன்பங்கள் விலகாவிடினும் அவற்றைப் பற்றிய பயம் நீங்கி, நிம்மதி ஏற்பட்டுவிடும்.
நெஞ்சுக்கு நிம்மதி;
ஆண்டவன் சந்நிதி!
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - நெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி! , நம்பிக்கை, புத்தகங்கள், நிம்மதி, நெஞ்சுக்கு, சந்நிதி, ஆண்டவன், அந்த, சிலருக்கு, சக்தி, தருகிறது, பலன், என்றார்கள், போய், பற்றி, நான், இந்துமதம், அர்த்தமுள்ள, ஒவ்வொரு, `ராமன், அற்புதம், விஷயங்கள், உண்டு, விட்டேன், பகுத்தறிய, தோன்றும், அந்தச், அப்படியே, இருந்தால், நம்பிக்கையில்தான், நிற்பது, வீண்போகவில்லை, கொண்டே, சிறந்த, காட்டுகிறான், உன்னை, உண்மையில், தெரியுமா, முதலில், துன்பங்களைக், தெரியாது