மலைபடுகடாம் - பத்துப்பாட்டு
கவண் கற்கள் படாமல் தப்பிச் செல்லவேண்டும் விதம்
புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவர் உயர்நிலை இதணம் ஏறிக் கைபுடையூஉ அகன்மலை யிறும்பில் துவன்றிய யானைப் |
205 |
பகனிலை தவிர்க்கும் கவணுமிழ் கடுங்கல் இருவெதிர் ஈர்ங்கழை தத்திக் கல்லெனக் கருவிர லூகம் பார்ப்போ டிரிய உயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன வரும்விசை தவிராது மரமறையாக் கழிமின் |
210 |
விளைநிலங்களில் குறவர்கள் பரண்மீது ஏறி இருந்துகொண்டு விளைச்சலைத் தின்னவரும் யானைகளை ஓட்டக் கவணால் கல் வீசுவர். அதன் தாக்கத்துக்குப் பயந்து, கருமையான விரல்களை உடைய ஊகக் குரங்குகள் மூங்கிலின்மீது தத்திப் பயந்து பாய்ந்தோடும். அந்த விசைக்கல் உங்கள்மீது பட்டால் கூற்றம்போல் உங்கள் உயிருக்கு உலை வைக்கலாம். எனவே அக் காலத்தில் மரமறைவில் செல்லுங்கள்.
காட்டாற்று வழிகளில் வழுக்கும் இடங்களைக் கடத்தல்
உரவுக்களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி இரவின் அன்ன இருள்தூங்கு வரைப்பின் குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர் அகழ்இழிந் தன்ன கான்யாற்று நடவை வழூஉமருங் குடைய வழாஅல் ஓம்பிப் |
215 |
பரூஉக்கொடி வலந்த மதலை பற்றித் துருவி னன்ன புன்றலை மகாரோடு ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின் |
ஆற்று மடுக்களில் முதலைகள் இருக்கும். ஆழமான அந்த மடுக்களில் நீர்ச்சுழிகள் இருக்கும். மலையில் மர அடர்த்தியால் இரவு போன்ற இருள் இருக்கும். ஆற்றின் ஓரமாகச் சென்றாலும் வழுக்கும் இடங்கள் உண்டு. அங்கெல்லாம் பருமனாக உள்ள கொடிகளைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகளை நடக்க விடாமல் தூக்கிக் கொண்டு ஒருவர் கடந்தபின் மற்றொருவர் என்று செல்ல வேண்டும்.
பாசி படிந்த குளக் கரைகளைக் கடந்து செல்லுதல்
அழுந்துபட் டலமரும் புழகமல் சாரல் விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா |
220 |
வழும்புகண் புதைத்த நுண்ணீர்ப் பாசி அடிநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய முழுநெறி பிணங்கிய நுண்கோல் வேரலோடு எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின் |
சில இடங்களில் வழுக்கும் இடங்களைப் பாசிகள் படர்ந்து மூடிக் கொண்டிருக்கும். வழுக்கி விழுந்தால் ஆழமான மடுவில் விழுந்து ஏற வழியின்றி உயிர் விட நேரும். ஒரு கையில் மூங்கில் கோலும், மற்றொரு கையில் எருவைக் கோலும் ஊன்றிக் கொண்டு செல்ல வேண்டும். (எருவைக்கோல் = பருந்தைப் போல் பற்றிக்கொள்ளும் கோல் – இக்காலத்தில் கால் எலும்பு மருத்துவத்துக்குப் பின் கால் நன்றாகக் கூடும் வரையில் ஊன்றிக்கொண்டு நடப்பதற்குத் தரும் கோல் போன்றது. இது தரையில் ஊன்றும் பகுதியில் பருந்தின் கால்விரல் போல 4 பிளவுகளைக் கொண்டிருத்தலை எண்ணுக.)
காரி உண்டிக் கடவுளைத் தொழுதல்
உயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய | 225 |
மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத் தாரொடு பொலிந்த வினைநவில் யானைச் சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி ஓரியாற் றியவின் மூத்த புரிசைப் பராவரு மரபிற் கடவுட் காணிற |
230 |
தொழாஅநிர் கழியின் அல்லது வறிது நும்மியந் தொடுதல் ஓம்புமின் மயங்குதுளி |
ஓங்கி உயர்ந்த பெரிய கற்பாறை. அங்கே யானைச்சிலை [புகர்முகம்]. இது இந்திரன் முருகனுக்கு வழங்கிய ஐராவதம் என்னும் தெய்வயானைத் தெய்வம் போலும். முருகன் குறிஞ்சிக்கடவுள். அதன் கழுத்தில் மாலை. அம்புகளால் தொடுக்கப்பட்ட மாலை. மழை பொழிவது போன்று அம்புகளால் தொடுக்கப்பட்ட மாலை. அந்த யானைக்குப் பக்கத்தில் இலஞ்சி [பொய்கை]. போர்த்திறம் கற்ற யானை முகத்தில் காணப்படும் சூழி என்னும் முகப்படாம் போல சுடரும் பூக்கள் மலர்ந்திருக்கும் பொய்கை. அது தனித்துச் செல்லும் ஆற்று வழி [இயவு]. அந்த யானைக்கோயிலுக்குச் சுற்றுமதில். மூத்த கற்களை அடுக்கி வைக்கப்பட்டுள்ள மதில். அதற்குள்ளே யானைச்சிலைக் கடவுள். மரபு வழியே தொழப்பட்டுவரும் கடவுள். அதனைக் காணும்பொழுது தொழுதுவிட்டுச் செல்லுங்ககள். அங்கெல்லாம் உங்களது இசைக்கருவிகளை வறிதே கொண்டுசெல்வதைத் தவிர்த்து முழக்கித் தெய்வத்தைப் பரவிவிட்டுச் செல்லுங்கள்.
மாரி தலையுமவன் மல்லல் வெற்பே |
மலைக் காட்சிகளில் ஈடுபடின், வழி தப்பும் என்று அறிவுறுத்தல்
அலகை யன்ன வெள்வேர்ப் பீலிக் கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் |
235 |
கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன நெடுங்கழைக் கொம்பர்க் கடுவன் உகளினும் நேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்த சூர்புகல் அடுக்கத்துப் பிரசங் காணினும் ஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்தன்று |
240 |
நிரைசெலல் மெல்லடி நெறிமாறு படுகுவிர் |
வளம் மிக்க அவன் மலையில் மழை மிகுதியாகப் பொழியும். அப்போதெல்லாம் மயில் கூட்டம், அலகைப் பேய் போல் ஆடும். பறை முழக்கும் கோடியர்களின் சிறுவர்கள் துள்ளி விளையாடுவது போல மூங்கில் கொம்புகளில் ஆண்குரங்குகள் பாய்ந்து விளையாடும். உயர்ந்தோங்கிய மலையில், அச்சம் தரும் பாறை இடுக்குகளில் வண்டிச்சக்கரம் போலத் தேன் கூடு கட்டியிருக்கும். இவற்றைத் திடீரென உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிடுங்கள். இவற்றைப் பார்த்துக் கொண்டே சென்றால், தடுக்கி விழவும், செல்லும் வழி தடுமாறவும் நேரும். எனவே செல்லும் வழியில் கவனம் வைத்துச் செல்லுங்கள்.
இரவில் குகைகளில் தங்குதல்
வரைசேர் வகுந்திற் கானத்துப் படினே கழுதிற் சேணோன் ஏவொடு போகி இழுதி னன்ன வானிணஞ் செருக்கி நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின் |
245 |
நெறிக்கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின் இருள்துணிந் தன்ன ஏனங் காணின் முளிகழை இழைந்த காடுபடு தீயின் நளிபுகை கமழா திறாயினிர் மிசைந்து துகளறத் துணிந்த மணிமருள் தெண்ணீர் |
250 |
குவளையம் பைஞ்சுனை அசைவிடப் பருகி மிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கட் பொதியினிர் புட்கை போகிய புன்றலை மகாரோடு அற்கிடை கழிதல் ஓம்பி ஆற்றநும் இல்புக் கன்ன கல்லளை வதிமின் |
255 |
கல்லுக் குகையில் மலைப்பாதை [வரைசேர் வகுந்து] வழியே கானகத்தில் செல்லுங்கள். கானவன் கழுது என்னும் பந்தலின்மேல் இருந்துகொண்டு எய்த அம்பு பட்டுக் காட்டுப்பன்றி விழுந்துகிடக்கும். காய்ந்த மூங்கில் உரசித் தானே பற்றி எரியும் காட்டுத்தீ விழுந்துகிடக்கும் காட்டுப்பன்றியை மணம் கமழாமல் சுட்டு வைத்திருக்கும். அதனைத் தூய்மைப் படுத்தி உண்ணுங்கள். அருகில் குவளை பூத்த சுனையில் இருக்கும் தூய்மையான தெளிந்த நீரைப் பருகுங்கள். மீதமுள்ள கறியைப் பொதியாகக் கட்டி எடுத்துச் செல்லுங்கள். பறவைச் சிறகு போல் பறந்து திரியும் மக்களோடு வழியில் தங்காதீர்கள். கற்குகைகளில் வீட்டில் தங்குவது போலப் பாதுகாப்பாகத் தங்குங்கள்.
விடியற்காலத்தில் செம்மையான பாதையில் செல்லுமாறு கூறுதல்
அல்சேர்ந் தல்கி அசைதல் ஓம்பி
வான்கண் விரிந்த விடிய லேற்றெழுந்து கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின் |
இரவில் நடக்காமல் வெளிச்சம் தெரியும் விடியலில் நல்ல பாதையைப் பார்த்துச் செல்லுங்கள். அல் = இரவு \ எல் = பகல், வான்கண் = வானத்தின் கண்ணாகிய எல்லோன் (சூரியன்)
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, செல்லுங்கள், இருக்கும், இலக்கியங்கள், அந்த, மலையில், வழுக்கும், செல்ல, மூங்கில், செல்லும், மாலை, என்னும், போல், மலைபடுகடாம், வேண்டும், கழிமின், பத்துப்பாட்டு, தன்ன, சங்க, அம்புகளால், போகிய, ஓம்புமின், தரும், புகர்முகம், பொலிந்த, மூத்த, பொய்கை, வரைசேர், ஓம்பி, விழுந்துகிடக்கும், வான்கண், இரவில், வழியில், கால், கடவுள், வழியே, தொடுக்கப்பட்ட, உயர்நிலை, மடுக்களில், பயந்து, ஆழமான, ஆற்று, ஒருவிர், னன்ன, புன்றலை, மகாரோடு, இருந்துகொண்டு, இரவு, மரபிற், கோலும், உடைய, கையில், நேரும், அங்கெல்லாம், கொண்டு, பாசி, கோல்