திருக்குறள் - 59.ஒற்றாடல்
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். |
581 |
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். |
582 |
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்த தில். |
583 |
ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்(கு) அனைவரையும் ஆராய்வ(து) ஒற்று. |
584 |
தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.
கடாஅ உருவொடு கண்ணஞ்சா(து) யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. |
585 |
ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.
துறந்தார் படிவந்த ராகி இறந்தாராய்ந்(து) என்செயினும் சோர்விலது ஒற்று. |
586 |
துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பா(டு) இல்லதே ஒற்று. |
587 |
மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். |
588 |
ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.
ஒற்றொற் றுணராமை ஆளக உடன்மூவர் சொல்தொக்க தேறப் படும். |
589 |
ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தா னாகும் மறை. |
590 |
ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குறள் - 59.ஒற்றாடல் , ஒற்றன், ஒற்று, இலக்கியங்கள், ஒற்றாடல், திருக்குறள், வல்லவனாய், வேண்டும், ஆவான், மற்றோர், ஒற்றர், உண்மை, தொழிலாகும், பதினெண், கீழ்க்கணக்கு, சங்க, மன்னவன், அரசன்