திருக்குறள் - 33.கொல்லாமை
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். |
321 |
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. |
322 |
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று. |
323 |
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
நல்லா(று) எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி. |
324 |
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. |
325 |
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
கொல்லாமை மேற்கொண்(டு) ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லா(து) உயிருண்ணும் கூற்று. |
326 |
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. |
327 |
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை. |
328 |
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து. |
329 |
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். |
330 |
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குறள் - 33.கொல்லாமை , கொல்லாமை, ஆக்கம், இலக்கியங்கள், கொல்லாத, நல்லது, எல்லாம், திருக்குறள், நீக்கும், வாழ்க்கை, கொலையால், சான்றோர்க்குக், இருந்தாலும், அஞ்சிக், பொய்யாமை, கீழ்க்கணக்கு, பதினெண், சங்க, என்றால், அறத்தைப், உயிரையும், கொலை