திருக்குறள் - 29.கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கத்தன் நெஞ்சு. |
281 |
பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். |
282 |
குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். |
283 |
களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். |
284 |
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். |
285 |
அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். |
286 |
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல். |
287 |
களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. |
288 |
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். |
289 |
களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு. |
290 |
களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குறள் - 29.கள்ளாமை , களவு, செய்து, கள்ளாமை, இலக்கியங்கள், பொருள், திருக்குறள், நிற்கும், அளவு, நெஞ்சில், கொள்ளுதலில், பிறர், விருப்பம், வாழும், இல்லை, தரும், கன்றிய, ஆக்கம், உள்ளத்தால், வேண்டும், கீழ்க்கணக்கு, பதினெண், களவின்கண், போல், சங்க