திருக்குறள் - 20.பயனில சொல்லாமை
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். |
191 |
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கள் செய்தலின் தீது. |
192 |
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. |
193 |
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. |
194 |
பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். |
195 |
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல். |
196 |
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. |
197 |
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். |
198 |
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். |
199 |
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல். |
200 |
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குறள் - 20.பயனில சொல்லாமை , பயனில, பயன், சொற்களை, பயனில்லாத, இலக்கியங்கள், இல்லாத, சொல்லாமை, அறம், சொற்களைச், திருக்குறள், சான்றோர், சொல்லுக, சொல்லமாட்டார், உடைய, சொல்லார், சொல்லவேண்டும், அறிவை, சொல், பண்பு, சங்க, கீழ்க்கணக்கு, பதினெண், நயனில, சொல்லுதல், சொற்களைப், சொல்லும், உடையவர்