திருக்குறள் - 130.நெஞ்சொடு புலத்தல்
அவர்நெஞ்(சு) அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது. |
1291 |
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறிஎன் நெஞ்சு. |
1292 |
என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்(கு) அவர்பின் செலல். |
1293 |
நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பர் இல்லை என்னும் எண்ணமோ?
இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்கண் மற்று. |
1294 |
நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. |
1295 |
( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு. |
1296 |
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு. |
1297 |
காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.
எள்ளின் இனிவாம்என் றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. |
1298 |
உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.
துன்பத்திற்(கு) யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையல் வழி. |
1299 |
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி. |
1300 |
ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குறள் - 130.நெஞ்சொடு புலத்தல் , நெஞ்சம், அஞ்சும், இலக்கியங்கள், நெஞ்சு, நெஞ்சொடு, துன்பம், அவருடைய, நெஞ்சே, திருக்குறள், புலத்தல், என்னைத், இருந்து, துணையாவார், நெஞ்சமே, தாமுடைய, தாம், உரிமையாகப், தனியே, அவர், கீழ்க்கணக்கு, பதினெண், சங்க, கண்டும், யார், எண்ணி, காதலரைப்