திருக்குறள் - 107.இரவச்சம்
கரவா(து) உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும். |
1061 |
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். |
1062 |
உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில். |
1063 |
வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு. |
1064 |
வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.
தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்த(து) உண்ணலி னூங்கினிய தில். |
1065 |
தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.
ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில். |
1066 |
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று. |
1067 |
இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். |
1068 |
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். |
1069 |
இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஓம் உயிர். |
1070 |
இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குறள் - 107.இரவச்சம் , இல்லை, உள்ளதை, இலக்கியங்கள், இரந்து, உயிர், இரவச்சம், இரப்பவர், போல், தில், திருக்குறள், உள்ளம், பதினெண், நாவிற்கு, விடும், கொடுமையை, நினைத்தால், நீர், உருகும், கீழ்க்கணக்கு, கோடி, இரந்தும், சங்க, இடமெல்லாம், இல்லாத, சால்பு, சென்று