திருக்குறள் - 104.உழவு

சுழன்றுஏர்ப் பின்ன(து) உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. |
1031 |
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
உழுவார் உலகத்தார்க்(கு) ஆணிஅஃ தாற்றா தெழுவாரை எல்லாம் பொறுத்து. |
1032 |
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். |
1033 |
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். |
1034 |
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.
இரவார் இரப்பார்ககொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். |
1035 |
கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.
உழவினார் கைமடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை. |
1036 |
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். |
1037 |
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. |
1038 |
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். |
1039 |
நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.
இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும். |
1040 |
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குறள் - 104.உழவு , உழவு, இலக்கியங்கள், தொழில், பின், இல்லை, செய்து, அதனால், திருக்குறள், சென்று, நல்லது, வாழ்கின்றவர், பதினெண், சங்க, கீழ்க்கணக்கு, உலகம்