பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச் சிறையான் அகப்படுத்தல் ஆகா; அறையோ- வருந்த வலிதினின் யாப்பினும், நாய் வால் திருந்துதல் என்றுமோ இல். |
336 |
வருந்துமாறு வலிபெறக் கட்டினாலும் நாயின் வால் வளைவினின்றும் நீங்கித்திருந்துதல் என்றும் இல்லை; (அதுபோல நிறையான் மிகுகல்லா நேரிழையாரை - மனத்தை அடக்கும் வலிமை மிக்கிராத அழகினை உடைய கலனணிந்திருக்கும் மகளிரை காவலால் தீய செயலினின்றும் நீக்கி அகப்படுத்தல் முடியாது முடியுமென்பா ருளராயின் அவரைஅறைகூவி அழைக்கின்றேன்.
கருத்து: மகளிர்க்குச் சிறைகாப்பினும்நிறைகாப்பே சிறந்ததாம்.
நல்கூர்ந்தவர்க்கு, நனி பெரியர் ஆயினார், செல் விருந்து ஆகிச் செலல் வேண்டா, ஒல்வது இறந்து அவர் செய்யும் வருத்தம்-குருவி குறங்கு அறுப்பச் சோரும் குடர். |
337 |
செல்வத்தால் மிகவும் பெரியவர் ஆயினார் வறுமையுடையார்க்கு அவரிடத்துச் செல்கின்ற விருந்தாகச் செல்லவேண்டா; ஒல்வது இறந்து அவர் செய்யும் வருத்தம் - தம்மா லியலுமாற்றைக் கடந்து விருந்து செய்தலான் வரும் வருத்தம் குருவி தொடையை அறுத்த அளவில் குடர்சோர்ந்து விழுந்துன்பத்தையொக்கும்.
கருத்து: செல்வமுடையார் வறியோரிடத்து விருந்தாகச் செல்லவேண்டா என்றது இது.
உடுக்கை, மருந்து, உறையுள், உண்டியோடு, இன்ன கொடுத்து, குறை தீர்த்தல் ஆற்றி விடுத்து, இன்சொல் ஈயாமை என்ப-எருமை எறிந்து, ஒருவர் காயக்கு உலோபிக்குமாறு. |
338 |
உடையும் மருந்தும் உறையுளும்உணவோடு இவற்றை யளித்து அவர் குறையை நீக்குதலைச்செய்து இனிய சொற்களைக் கூறாமை ஒருவர் உணவின் பொருட்டுஎருமையைக் கொன்று அதனைச்சமைத்தற்குரிய காயம் வாங்குதற்கு லோபிக்குமாற்றையொக்கும் என்று சொல்லுவார்கள்.
கருத்து: கொடைக்குஇன்சொல் இன்றியமையாது வேண்டப்படுவ தொன்றாம்.
தத்தமக்குக் கொண்ட குறியே தவம் அல்ல; செத்துக! சாந்து படுக்க! மனம் ஒத்துச் சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே- நுகத்துப் பகல் ஆணி போன்று. |
339 |
தத்தமக்குத் தோன்றியவாறே கொண்ட வேடங்கள் தவமாகா; வாளாற் செத்துக அன்றிக் குளிர்ந்த சந்தனத்தைப் பூசுக மனம் பொருந்தி நுகத்தின்கண் நடுவு நிற்கும்பகலாணியை ஒப்ப ஒன்று பட்டவனாகி நடுவுநிலையினின்று ஒழுகும் அமைதியே தவமாம்.
கருத்து: காய்த லுவத்த லின்றிஒழுகும் அமைதியே தவமாம்.
உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால், கொள்ளும் பொழுதே கொடுக்க, தாம் கொள்ளார்; 'நிலைப் பொருள்' என்று அதனை நீட்டித்தல் வேண்டா;- புலைப் பொருள் தங்கா, வெளி. |
340 |
தன்னிடத்துள்ளதொரு பொருளை ஒருவர் ஒருவரிடத்துக் காவல் செய்து தருமாறு கொடுத்தால் அவர் வேண்டியபொழுது. தாம் அகப்படுத்திக் கொள்ளாமல் கொடுக்கக் கடவர் நிலைமையான பொருள் என்று கருதிக் கொடாது காலம் நீட்டித்தல் வேண்டா; புலால் நாறும் பொருள் எங்ஙனம் மறைப்பினும் மறைபடாது வெளிப்பட்டுவிடும்ஆதலான்.
கருத்து: அடைக்கலப்பொருளைக் கொள்ளாது வேண்டிய பொழுது கொடுத்துவிடுக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, ஒருவர், கருத்து, இலக்கியங்கள், அவர், பொருள், நானூறு, பழமொழி, பதினெண், கீழ்க்கணக்கு, வேண்டா, வருத்தம், செத்துக, கொண்ட, அமைதியே, தாம், நீட்டித்தல், தவமாம், செல்லவேண்டா, ஒழுகும், மனம், இறந்து, அகப்படுத்தல், மிகுகல்லா, நிறையான், சங்க, வால், ஆயினார், குருவி, செய்யும், ஒல்வது, விருந்து, விருந்தாகச்