பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
27. மன்னரைச் சேர்ந்தொழுகல்
கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார், எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை மடித்து ஒழிதல், என் உண்டாம்?-மாணிழாய்!-கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல். |
266 |
மாட்சிமைப்பட்ட அணிகலன்களை உடையாய்! மயக்கந்தரும்கள்ளினைக்குடித்து சோம்பி அடங்கியிருப்பார் ஒருவருமிலர் (ஆதலால்) கொடி அசைகின்ற வலிய தேரினை உடைய அரசர்களது பொருளை உண்டு உயிர் வாழ்பவர்கள் ஒரு செயலை மனத்தின்கண் நினைத்தலை மேற்கொண்டு அவ்வரசர் ஏவிய ஆணையை சோம்பல்கொண்டு விரைந்து செய்யாதொழிதலால் என்ன பயன் உண்டாம்?
கருத்து: அரசன் ஆணையை உடனேயே அவன்கீழ் வாழ்வார் செய்தல் வேண்டும்.
வெற்றி வேல் வேந்தன் வியங்கொண்டல், 'யாம் ஒன்றும் பெற்றிலேம்' என்பது பேதைமையே; மற்று அதனை எவ்வம் இலர் ஆகிச் செய்க!-அது அன்றோ, 'செய்க!' என்றான், 'உண்க!' என்னுமாறு. |
267 |
வெற்றி பொருந்திய வேலேந்திய அரசன் ஏவல் கொண்டால் யாம் செயத்தகும் ஆற்றல் ஒரு சிறிதும் அடைந்தோமில்லையே என்று கூறுவது அறியாமையேயாம் அவர் ஏவிய செயலைத் துன்புறுதலின்றிச் செய்யத் தொடங்குக அச்செயல் செய்க என்று கூறியவன் உண்க என்று கூறியதைஒக்குமன்றோ?
கருத்து: அரசன் ஏவியதைத் தட்டாது செய்யத் தொடங்குக.
'எமர் இது செய்க, எமக்கு!' என்று, வேந்தன் தமரைத் தலைவைத்த காலை, தமர் அவற்கு வேலின்வாய் ஆயினும்,வீழார்; மறுத்து உரைப்பின்,- 'ஆல்' என்னின் 'பூல்' என்னுமாறு. |
268 |
எம்மவராதலான் எமக்கு இச்செயலை முடித்துத் தருக என்று அரசன் தன்கீழ் வாழ்வாரை ஒரு செயல் செய்யும்பொருட்டு நம்பி நியமித்த இடத்து.தமர் - அவன் கீழ் வாழ்வார் அவர் பொருட்டாக வேலிடத்தாயினும் வீழாதவர்களாகி இயலாது என்று மறுத்துக் கூறலின் (அஃது) அதோ தோன்றுவது (பெரிய) ஆலமரமென்று ஒருவன் கூறலுறின் (அதற்கு மாறாக) மற்றொருவன் அது சிறிய பூலாச் செடியே என்று கூறுதலை ஒக்கும்.
கருத்து: அரசன் ஏவலை மேற்கொண்டார் உயிர் கொடுத்தாயினும் அதனை முடித்தல் வெண்டும்.
விடலைமை செய்ய வெருண்டு அகன்று, நில்லாது, உடல் அரு மன்னர் உவப்ப ஒழுகின்,- மடல் அணி பெண்ணை மலி திரைச் சேர்ப்ப!- கடல் படா எல்லாம் படும். |
269 |
மடல்களையுடைய பனைமரங்கள் மலிந்த கடல் நாடனே! பிறரால் வெல்லுதற்கரிய வலிமையுடைய அரசர்கள் தம்மைவிட்டு நீங்குமாறு நெருங்கி நின்று ஆகாதன செய்தும் அஞ்சி அகன்று நில்லாதும் அவர் மனமகிழ ஒழுகுவராயின் கடலில் உண்டாகாத வளமெல்லாம் அவர்க்கு உளவாம்.
கருத்து: மன்னரைச் சேர்ந்தொழுகுவார் அகலாது அணுகாது வாழக்கடவர்.
உவப்ப உடனபடுத்தற்கு ஏய கருமம் அவற்று அவற்று ஆம் துணைய ஆகி, பயத்தால், வினை முதிரின் செய்தான்மேல் ஏறும்;-பனை முதிரின், தாய் தாள்மேல் வீழ்ந்துவிடும். |
270 |
பனையினது பழம் முற்றின் தாய்ப்பனையினது தாளின் மேலேயே வீழும்; (அதுபோல) அரசன் தான் உவக்கும் படி செய்து முடித்தற்கு ஏவிய செயல்கள்.அவற்று அவற்று ஆம் துணைய பயத்தால் ஆகி - அவ்வச் செயல்களின் அளவாகிய பயனோடு அச்செயல் முடியின் அஃது ஏவியவனையன்றிச் செய்தவனையே சேரும்.
கருத்து:அரசன் ஏவிய கருமங்கள் பயன்பட முடிந்தால் அப்புகழ் செய்தவனையே சேரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, அரசன், கருத்து, ஏவிய, இலக்கியங்கள், அவற்று, செய்க, பதினெண், பழமொழி, நானூறு, கீழ்க்கணக்கு, அவர், வாழ்வார், கடல், உவப்ப, அஃது, தமர், அகன்று, துணைய, சேரும், செய்தவனையே, முதிரின், பயத்தால், எமக்கு, அச்செயல், வேந்தன், யாம், வெற்றி, உயிர், சங்க, உண்டாம், உண்க, தொடங்குக, செய்யத், மன்னரைச், என்னுமாறு, ஆணையை