பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
கை ஆர உண்டமையால், காய்வார் பொருட்டாக, பொய்யாகத் தம்மைப் பொருள் அல்லார் கூறுபவேல்,- மை ஆர உண்ட கண் மாண் இழாய்!-என் பரிப, செய்யாத எய்தா எனில். |
56 |
மையினை மிகுதியும் உண்ட கண்களையும் மாட்சிமைப்பட்ட கலன்களையும் உடையாய்! (தம் பகைவர் கொடுத்த பொருளை) கைநிறைய வாரி வாரி உண்டமையால் (அவர் கூறியதைச் செய்யாதவழி) சினப்பர் என்பது காரணமாக மனிதனாகவன்றி ஒரு பொருளாகவும் கருதப்படாத அற்பர்கள் தம்மீது உண்மை இல்லாத சில பழிச் சொற்களைக் கூறினரேல் தாம் செய்யாத பழிச் சொற்கள் தம்மை வந்து அடையாவாகலான் எது கருதி வருந்துவது? (வருந்துதல்வேண்டா).
கருத்து: தம் பகைவர் முயற்சியால் அறிவிலார் பழி கூறினரேல் அதற்காக வருந்தவேண்டுவதில்லை.
ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக் காய்ந்து, எதிர் சொல்லுபவோ, கற்று அறிந்தார்?-தீம் தேன் முசுக் குத்தி நக்கும் மலை நாட!-தம்மைப் பசுக் குத்தின், குத்துவார் இல். |
57 |
இனிய தேன் கூட்டை ஆண்குரங்கு கிழித்து (ஒழுகும் தேனை) நக்குகின்ற மலைநாடனே! பசு தம்மை முட்டினால் (சினந்து தாமும்) முட்டுவார் இல்லை ஆராய்ந்த அறிவினை உடையரல்லாதவர்கள் சொல்லும் பொருளற்ற சொற்களுக்கு நூல்களைக் கற்று ஆராய்ந்து அறிந்தவர்கள் சினந்து எதிராகப் பொருளற்ற சொற்களைக் கூறுவரோ? கூறார்.
கருத்து: ஆராய்ச்சியில்லாதவர்கள் கூறும் அற்பச் சொற்களைப் பொருளாகக்கொண்டு கற்றறிந்தார் சினவார்.
நோவ உரைத்தாரைத் தாம் பொறுக்க லாகாதார், நாவின் ஒருவரை வைதால், வயவு உரை,- பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய்!-அது அன்றோ, தீ இல்லை ஊட்டும் திறம். |
58 |
பூப்போல விளங்குகின்ற விசாலமான கண்ணையுடையாய்! மனம் வருந்துமாறு அடாத சொற்களைச் சொல்லியவர்களை அவர் கூறிய சொற்களைப் பொறுக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் தமது நாவினைக் கொண்டு தம்மை வைதாரைத் தாம் இகழ்ந்து கூறினால் தீயினால் வீட்டினைக்கொளுத்தும் திறம்போல் அது ஆகும்அல்லவா?
கருத்து: தம்மை இகழ்ந்தாரைத் தாமும் இகழ்தல் தமக்குத் துன்பத்தை விளைவித்துக்கொள்வதாக முடியும்.
கறுத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப் பொறுத்து, ஆற்றிச் சேறல் புகழால்;-ஒறுத்து ஆற்றின், வான் ஓங்கு உயர் வரை வெற்ப! பயம் இன்றே தான் நோன்றிட வரும், சால்பு. |
59 |
வானளவு உயர்ந்த பெரிய மலைகளை உடைய வெற்பனே! ஒருவன் பொறுக்கும் பொறையினால் வருவது அவனது குணம் சினத்தின்கண் மிக்குத் தமக்குத் தீய செயல்களைச் செய்தாரை அவர் தீச் செயல்களைப் பொறுத்து அவர்க்கு நன்மை செய்து ஒழுகுதல் புகழாகும் கோபித்துத் தாமும் தீயசெய்கைகளைச் செய்தால் அதனால் புகழ்உண்டாதல் இல்லை.
கருத்து: தீங்குசெய்தார்க்கு நன்மை செய்தல் வேண்டும்.
8. பெரியாரைப் பிழையாமை
அறிவு அன்று; அழகு அன்று; அறிவதூஉம் அன்று; சிறியர் எனப்பாடும் செய்யும்;-எறி திரை சென்று உலாம் சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த, என்று ஊடு அறுப்பினும், மன்று. |
60 |
காற்றால் எறியப்படும் அலைகள் கரைமேல் சென்று உலாவுகின்ற கடல் நாடனே! என்று ஊடு அறுப்பினும் குழுவத்தார் மேயிருந்தமன்று - சூரியனை ஊடறுத்துச் செல்லினும் அறிஞர்கள் பொருந்தியிருந்த அவையை ஊடறுத்துப் போகலாகாது அறிவுடைமை யாகாது பிறந்த குடிக்கு அழகினைத் தாராது அறிவதாகிய அறநெறியும் ஆகாது கீழ்மக்கள் என்று சொல்லப்படுதலையும் செய்யும்.
கருத்து: அவையைஊடறுத்துச் செல்லலாகாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், தம்மை, பழமொழி, தாம், கீழ்க்கணக்கு, தாமும், அன்று, இல்லை, அவர், நானூறு, பதினெண், தமக்குத், பொறுக்கும், சொற்களைப், பொருளற்ற, பொறுத்து, சங்க, அறுப்பினும், குழுவத்தார், சென்று, செய்யும், நன்மை, உண்டமையால், கூறினரேல், சொற்களைக், பழிச், பகைவர், செய்யாத, உண்ட, சினந்து, தேன், கற்று, தம்மைப், வாரி