நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு
நகை இனிது, நட்டார் நடுவண்; பொருளின் தொகை இனிது, தொட்டு வழங்கின்; தகை உடைய பெண் இனிது, பேணி வழிபடின்; பண் இனிது பாடல் உணர்வாரகத்து. |
36 |
நண்பரிடத்தில் முகமலர்ச்சி தளும்பும். வறிஞர்களுக்கு வழங்குவதால் செல்வக்குவியல் இன்பம் தரும். கணவனின் கருத்திற்கு ஏற்ப செயல்படுவதால் பெண்கள் இனியராவர். பாடலுணர்வாரிடத்துப் பண் இனிமை தரும்.
கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல்; எஞ் ஞான்றும் இரப்பவர்க்குச் செல்சார் ஒன்று ஈவோர்; பரப்பு அமைந்த தானைக்குச் செல்சார் தறுகண்மை; ஊன் உண்டல் செய்யாமை, செல்சார் உயிர்க்கு. |
37 |
இல்லையென்று பொருள்களை ஒளிப்பவர்கள் இரப்பவர்களைக் கண்டால் முகம் கவிழ்வார். இரப்பவர்களுக்கு ஈகைக் குணம் உடையவரே பற்றுக் கோடாவர். பரபரப்புள்ள சேனைகளுக்கு வீரமே ஒரு பற்றுக்கோடு. ஊன் உண்ணாமல் இருத்தல் அருளொழுக்கத்தோடிருக்கும் உயிர்களுக்குப் பற்றுக்கோடாகும்.
கண்டதே செய்பவாம், கம்மியர்; உண்டு எனக் கேட்டதே செய்ப, புலன் ஆள்வார்; வேட்ட இனியவே செய்ப, அமைந்தார்; முனியாதார் முன்னியவே செய்யும், திரு. |
38 |
கம்மாளர் தாம் கண்ணால் கண்ட பொருள்களைப் போன்றே அணி செய்வர். அறிஞர் கல்வி கேள்விகளால் தெளிந்தவற்றையே செய்வர். சான்றோர் பிறர் விரும்புவதில் இனிமையானவற்றையே செய்வர். எளியவர்களையும் சினவாத பெரியோர்கள் கருதியவற்றைத் திருமகள் முடித்து வைப்பாள்.
திருவும் திணை வகையான் நில்லா; பெரு வலிக் கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது; ஆற்ற மறைக்க மறையாதாம், காமம்; முறையும் இறை வகையான் நின்றுவிடும். |
39 |
குடிவகைக்கு ஏற்ப செல்வம் நில்லாது. கூற்றுவான் தான் உண்ணப்படுகின்றவன் சொல்பவற்றைக் கேட்கமாட்டான். மறைத்தாலும் காமம் மறையாது. அரசனது போக்கிற்கு ஏற்ப ஆட்சி முறை அமையும்.
பிறக்குங்கால் 'பேர்' எனவும் பேரா; இறக்குங்கால், 'நில்' எனவும் நில்லா; - உயிர் எனைத்தும் நல்லாள் உடம்படின், தானே பெருகும்; கெடும் பொழுதில், கண்டனவும் காணா கெடும். |
40 |
உயிர்கள் பிறக்கும் போது உடலை நீங்குக என்றால் நீங்காது. இறக்கும் போது உயிரை நில் என்றாலும் நிற்காது. திருமகள் அருள் கூடும் போது செல்வம் பெருகும். திருமகள் நம்மை விட்டு நீங்கும்போது செல்வம் தானே நீங்கிவிடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, இனிது, செல்சார், இலக்கியங்கள், நான்மணிக்கடிகை, திருமகள், போது, செல்வம், ஏற்ப, செய்வர், கீழ்க்கணக்கு, பதினெண், நில், எனவும், பெருகும், கெடும், தானே, காமம், கல்வி, செய்ப, சங்க, வகையான், நில்லா, தரும்