நாலடியார் - 18.நல்லினம் சேர்தல்

அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப் புற்பனிப் பற்றுவிட் டாங்கு. |
171 |
அறியாப் பருவத்தில் அடக்கம் இல்லாதவரோடு கூடி நெறியல்லாதன செய்தமையால் நேர்ந்த பாவங்களும், நல்லாரைச் சார்ந்து ஒழுகலால், வெயில் மிகுந்தோறும் புல்லின்மேல் படிந்த பனிநீர் அதனை விட்டு நீங்குதல் போலக் கெடும்.
அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்; பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்; வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல். |
172 |
அறத்தின் நெறியை அறியுங்கள்! எமனுக்கு அஞ்சுங்கள்! அறியார் கூறும் கடுஞ் சொல்லைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! வஞ்சனைக் குணம் உங்களிடம் வராதபடி பாதுகாத்துக் கொள்ளுங்கள்! தீயோர் நட்பை வெறுத்து ஒதுக்குங்கள்! எப்போதும் பொ¢யோர் அறவுரைகளைக் கேளுங்கள்!
அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும் உடங்குடம்பு கொண்டார்க்கு உறலால் - தொடங்கிப் பிறப்பின்னாது என்றுணரும் பேரறிவி னாரை உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு. |
173 |
அன்புடன் தன்னைச் சார்ந்திருப்பவர்களைப் பிரிதலும், மருந்தால் தீர்தற்கா¢ய நோயும், மரணமும் உடம்பு எடுத்தார்க்கு உடனே வந்து எய்தலால், பழையதாய்த் தொடர்ந்து வரும் பிறப்பினைத் துன்பம் தருவது என்று அறியும் சிறந்த அறிவுடையாரை என் நெஞ்சமானது சிக்கெனப் பற்றுவதாக! (பிறப்புத் துன்பத்தை உணரும் ஞானிகளைச் சேர்தல் நல்லதாம்.)
இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும் பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள் பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும் நண்பாற்றி நட்கப் பெறின். |
174 |
மிகவும் ஆராய்ந்து பார்த்தால், பிறப்பு, துன்பம் தருவது எனினும் நற்குணங்கள் நிறைந்த நல்லோருடன் சேர்ந்து அவர் தம் நற்குணங்களைப் பெற்று எல்லா நாளும் அவர்களுடன் நட்புக் கொள்வாராயின் அப்போது யாரும் இந்தப் பிறப்பினை வெறுக்கமாட்டார்கள். (இந்தப் பிறப்பு இனிமையுடையது என்பர்).
ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓரும் குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து. |
175 |
ஊரில் உள்ள சாய்க்கடை நீர், கடல்நீரைச் சேர்ந்தால், அது (தன்தன்மை மாறுபடுவதோடு) பெயரும் வேறுபட்டுத் 'தீர்த்தம்' என்னும் பெயர் பெறும். அதுபோல, பெருமையில்லாத குடியிற் பிறந்தவரும் பெருமை மிக்க பொ¢யாரைச் சேர்ந்தால், மலைபோல் உயர்ந்து நிற்பர் (தீர்த்தம் - தூயநீர்).
ஒண்கதிர் வான்மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம் குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர் குன்றன்னார் கேண்மை கொளின். |
176 |
அழகிய இடத்தையுடைய வானத்திலே உள்ள ஒளி பொருந்திய சந்திரனைச் சேர்ந்திருப்பதால், முயலும் சந்திரனைத் தொழும்போது சேர்த்துத் தொழப்படும். அதுபோல, சிறப்பு இல்லாதவராயினும் குன்றுபோலும் உயர்ந்த நற்குணங்கள் உடையாரைச் சேர்ந்தவராயின் பெருமை பெறுவர். (குன்று போல் உயர்ந்து தோன்றுவர்).
பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; - தேரின் சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து. |
177 |
பாலுடன் கலந்த தண்ணீர் பாலாகவே தோன்றுமே அல்லாமல் நீரின் நிறத்தை வேறுபடுத்திக் காட்டாது. அதுபோல், ஆராயுமிடத்து நற்குணமுடைய பொ¢யோரின் பெருங்குணத்தைச் சேர்ந்தால் சிறியோரின் சிறுமைக் குணமும் தோன்றாது.
கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல் ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு; மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல் செல்லாவாம் செற்றார்சினம். |
178 |
புன்செய் நிலத்திலும், பொ¢ய நன்செய் நிலத்திலும் மரக்கட்டையைச் சார்ந்து முளைத்திருக்கும் புல்லானது, உழவா¢ன் கலப்பைக்குச் சிறிதும் அசையாது. அதுபோல, வலிமை அற்றவராயினும் வலிமை மிக்காரைச் சார்ந்திருப்பாராயின், பகைவர் சினம் அவர்மேல் செல்லாது.
நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம் குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத் தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை தீயினம் சேரக் கெடும். |
179 |
நிலத்தின் வளத்தினால் செழித்து வளரும் நெற்பயிர் போல, மக்கள் தாங்கள் சேரும் கூட்டத்தின் சிறப்பால் உயர்வர். கடலில் செல்லும் மரக்கலத்தைச் சுழல் காற்றுத் தாக்கிக் கெடுப்பது போல, ஒருவா¢ன் உயர் குணங்கள் தீயோருடன் சேர்தலால் கெடும்.
மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த இனத்தால் இகழப் படுவர் - புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனந் தீப்பட்டக் கால். |
180 |
காடு தீப்பற்றி எரியும்போது மணம் வீசும் சந்தன மரமும் வேங்கை மரமும்கூட வெந்து போகும். அதுபோல, மனத்தில் ஒரு குற்றமும் இல்லாத நல்லவராயினும் அவர்கள் தாம் சேர்ந்த தீய இனத்தின் காரணமாக இகழப்படுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாலடியார் - 18.நல்லினம் சேர்தல் , சார்ந்து, இலக்கியங்கள், சேர்தல், அதுபோல, கெடும், சேர்ந்தால், நல்லினம், நாலடியார், இந்தப், தீர்த்தம், நிற்பர், உள்ள, உயர்ந்து, நிலத்திலும், வலிமை, தோன்றாதாம், முயலும், நற்குணங்கள், சேர்தலால், பெருமை, எனினும், நற்சார்வு, நல்லாரைச், அறியாப், சங்க, பதினெண், கீழ்க்கணக்கு, கேண்மை, எஞ்ஞான்றும், பிறப்பினை, யாரும், தருவது, துன்பம், கொள்ளுங்கள், பிறப்பு