ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு
களியான், கள் உண்ணான், களிப்பாரைக் காணான், ஒளியான் விருந்திற்கு, உலையான், எளியாரை எள்ளான், ஈத்து உண்பானேல், ஏதம் இல் மண் ஆண்டு கொள்வான், குடி வாழ்வான், கூர்ந்து. |
46 |
கள்ளையுண்டு களியாமலும், கள்ளையுண்ணாமலும், களிப்பாரைக் காணாமலும், வந்த விருந்தினரை ஓம்புதற்குப் பயந்து ஒளியாமலும், விருந்தினரை ஓம்பி மன நோகாமலும், ஏற்றோர்க்குக் கொடுத்துத் தானும் உண்பானாயின்; தானே மண் அனைத்தும் ஆண்டுகொள்வதுமன்றித் தன் இல்லற வாழ்க்கையினும் ஓங்கி வாழ்வான்.
கருத்து: செருக்காமை முதலியன உடையான், குடிபெருகி நாடாள்வான்.
பெரியார் சொல் பேணி, பிறழாது நின்று, பரியா அடியார்ப் பறியான், கரியார் சொல் தேறான், இயையான், தெளிந்து அடிசில் ஈத்து உண்பான் - மாறான், மண் ஆளுமாம் மற்று. |
47 |
ஒழுக்கத்திற் பெரியோரது உறுதிமொழியைப் போற்றி, அவ்வொழுக்குக்குத் தக வழுவாது நிலைத்து, அன்பு நிறைந்த அடியவரை விட்டு நீங்காது, மருள் நீங்காரது சொல்லைக் கொள்ளாது, அவரோடு பொருந்தாது, வேள்வியின் பயனறிந்து பகுத்துண்பவன், நீங்காதவனாய்ப் பூமி முழுதும் ஆளும் அரசன் ஆவான்.
கருத்து: பெரியார் சொற்பேணல் முதலியன உடையவன் கட்டாயம் மண்ணாள்வான்.
வேற்று அரவம் சேரான், விருந்து ஒளியான் தன் இல்லுள் சோற்று அரவம் சொல்லி உண்பான் ஆயின், மாற்று அரவம் கேளான், கிளை ஓம்பின், கேடு இல் அரசனாய், வாளால் மண் ஆண்டு வரும். |
48 |
பழிதருஞ் செயலை விரும்பானாகி, வந்த விருந்தினர்க் கஞ்சி ஒளியாமல் தன் இல்லத்தில் பிறர் வந்துண்ணும்படியாகத் தான் உண்ணுஞ் செய்தியை யறிவித்துப் பின் ஒருவன் உண்பானாயின், பகையரசர் சொல்லுங் கேட்க வேண்டானாய்த் தன் குடும்பத்தைப் பேணி அழிவில்லாத அரசுரிமையுடையவனாய் வாளால் வெல்லும் பூமியினை ஆண்டுகொண்டிருப்பான்.
கருத்து: தீய சொற்களைப் பேசாமை முதலியன உடையவன் என்றும் நாடாள்பவனாவான்.
யானை, குதிரை, பொன், கன்னியே, ஆணிரையோடு ஏனை ஒழிந்த இவை எல்லாம், ஆன் நெய்யால் எண்ணன் ஆய், மா தவர்க்கு ஊண் ஈந்தான் - வைசிர- வண்ணன் ஆய் வாழ்வான் வகுத்து. |
49 |
யானையும் குதிரையும் பொன்னும் கன்னிகையும் பசுவின் கூட்டமும், மற்றப் பொருள்களும் வேண்டியஅவரவர்க்கு வகையறிந்து ஈந்தவனும், மாதவர்க்குப் பசுவினெய்யுடன் உணவளித்து அன்பு செய்தவனும் ஆகிய ஒருவன், குபேரப் பட்டம் பெற்று வாழ்வான்.
கருத்து: தவத்தோர்க்கு ஆவின் நெய் பெய்த உணவும், ஏனையோர்க்கு யானை, குதிரை முதலானவைகளும் வழங்குகின்றவன், குபேரனைப்போற் பெருஞ் செல்வமுந் தனிமதிப்பும் உடையனாவான்.
எள்ளே, பருத்தியே, எண்ணெய், உடுத்தாடை, வள்ளே, துணியே, இவற்றோடு, கொள் என, அன்புற்று, அசனம் கொடுத்தான் - துணையினோடு இன்புற்று வாழ்வான், இயைந்து. |
50 |
அன்புடன் உணவினையும் எள்ளினாகிய எண்ணெயையும் பருத்தியினாகிய உடுக்கையையும் கொடுத்து, கணக்கு நூலையும் இலக்கண நூலையும் பயன்படும் நுட்பத்தோடும் தெளிந்த அறிவோடும் கொள்வோர்க்கு உளமார உதவியவன் தன் மனைவியுட னின்புற்று அளாவி வாழ்வான்.
கருத்து: மாதவர்க்கு எள் முதலியவற்றை அன்புடன் ஈவான், தன் மனைவி மக்களோடு இன்பமாய் வாழ்வான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, வாழ்வான், கருத்து, இலக்கியங்கள், ஏலாதி, கீழ்க்கணக்கு, பதினெண், அரவம், முதலியன, வாளால், சங்க, உடையவன், அன்பு, ஒருவன், யானை, நூலையும், அன்புடன், குதிரை, உண்பான், பேணி, விருந்தினரை, வந்த, ஈத்து, உண்பானாயின், ஒளியான், சொல், பெரியார், களிப்பாரைக், ஆண்டு