நற்றிணை - 73. பாலை

வேனில் முருக்கின் விளை துணர் அன்ன மாணா விரல வல் வாய்ப் பேஎய் மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய, மன்றம் போழும் புன்கண் மாலை, தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச் |
5 |
செல்ப என்ப தாமே- செவ் அரி மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச் செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும் பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என் நுதற் கவின் அழிக்கும் பசலையும், |
10 |
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே. |
வேனிற் காலத்துச் செம்முருக்கின் பூங்கொத்தில் காய்த்து முற்றிய நெற்றுப்போன்ற மாண்பில்லாத விரல்களையுடைய பூசலிடுகின்ற வலிய வாயையுடைய பேய்; வளப்பத்தையுடைய பழைமையாகிய ஊரின்கண்ணே தெய்வத்தின்முன் னிடப்படும். அருச்சனையுடனாகிய ஊன்மிடைந்த பலிச் சோற்றையுண்ண வேண்டித் தான் நிலைபெற்றிருக்கின்ற பாழ்மன்றத்தை மோதியெழுகின்ற பிரிந்தாரைத் துன்புறுத்து மாலைப் பொழுதிலே; நம் தலைவரொடு முயங்கிக் கிடப்பினும் அஞ்சுகின்ற நாம் தனியே இங்குத் தங்குமாறு நம்மைக் கைவிட்டு; செவ்விய ஐதாகிய மயிரை நிரைத்து வைத்தாற்போன்ற நீண்ட திரட்சியையுடையனவாய் வளைந்த செந்நெற் கதிர்களையுடைய வயல்களில் அன்னப் பறவை துஞ்சா நிற்கும் பொலிவு பெற்ற விளங்கிய கொல்லைகளையுடைய திருசாய்க் கானத்தைப் போன்ற; எனது நெற்றியின் அழகை அழிக்கும் பசலையையும் அதனை நோக்கி அயலிலாட்டியர் தூற்றும் பழிச் சொல்லையும் எனக்குக் கொடுத்து; தாம் செல்ப என்ப தாம் செல்கிற்பத்தேரன்று உழையர் கூறாநிற்பர்;
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது. - மூலங்கீரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 73. பாலை, இலக்கியங்கள், பாலை, நற்றிணை, அழிக்கும், தூற்றும், தாம், என்ப, அன்ன, எட்டுத்தொகை, சங்க, செல்ப