நற்றிணை - 69. முல்லை
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி, சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய, பறவை பார்ப்புவயின் அடைய, புறவில் மா எருத்து இரலை மடப் பிணை தழுவ, முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின் |
5 |
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ, மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி, கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி, ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை, ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் |
10 |
இனையவாகித் தோன்றின், வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே! |
பல கதிர்களையுடைய ஆதித்த மண்டிலம் பகற்பொழுதைச் செய்து முடித்து மிகவுயர்ந்த பெரிய அத்தமயமலையிற்சென்று அங்கே மறையவும்; பறவைகள் தம் பிள்ளைகளிருக்கும் கூட்டிற் சென்று தங்கியிருப்பவும்; காட்டின் கண்ணே கரிய பிடரியையுடைய கலைமான் இளைமையையுடைய தன் பெண்மானைத் தழுவியிருப்பவும்; முல்லையரும்புகள் மலரவும்; பலவிடங்களிலுள்ள புதர் தோறும் காந்தள் தழைத்துத் தன் மலராகிய விளக்கேந்தி நிற்பவும்; செம்மாப்பையுடைய நல்ல பசுவின் குற்றமற்ற மணியின் தௌ¤ந்த ஓசை வளைந்த கோலையுடைய ஆயர்தங் குழலோசையோடு சேர்ந்து மெல்லிதாக வந்து ஒலியாநிற்கும் அருள் இல்லாத இம்மாலைப் பொழுதானது; பொருளீட்டு¢ முயற்சியால் நம்மைக் கைவிட்டு அகன்ற தலைவர் சென்ற நாட்டிலும் இத்தன்மையாகத் தோன்றுமாயின்; அவர் தாம் ஏறட்டுக் கொண்ட செயலின் கண்ணே உறுதிகொண்டு தங்கியிருப்பாரல்லர்; அப்படி இல்லாமற் கழிகின்றது;
வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது. - சேகம்பூதனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 69. முல்லை, இலக்கியங்கள், முல்லை, நற்றிணை, அருள், சென்ற, கண்ணே, வந்து, மண்டிலம், எட்டுத்தொகை, சங்க, செய்து, சென்று