நற்றிணை - 67. நெய்தல்
சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் மால் வரை மறைய, துறை புலம்பின்றே; இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே; |
5 |
கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித் துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை, எல் இமிழ் பனிக் கடல், மல்கு சுடர்க் கொளீஇ, எமரும் வேட்டம் புக்கனர்; அதனால், தங்கின் எவனோதெய்ய- பொங்கு பிசிர் |
10 |
முழவு இசைப் புணரி எழுதரும் உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே? |
சேய்மைக் கண்ணே ஆகாயத்திலேறி வந்த செழுவிய கிரணங்களையுடைய ஆதித்த மண்டிலம் பெரிய அத்தம் என்னும் சிலம்பினூடு சென்று மறைதலானே யாருமின்றி நமது கடற்றுறை தனிமையா யிராநின்றது; இறா மீனைத் தின்றெழுந்த கரிய காலையுடைய வெளிய நாரைகள்; வெளிய உப்புக் குவட்டின் மேலாக அரிய சிறகை வீசிப் பறந்துசென்று கரையிலுள்ள கரிய கிளைகளையுடைய புன்னை மரங்களிலே தங்குதல் கொண்டன; திரண்ட தண்டினையுடைய நெய்தல் (கரிய) மலர் மறையும் படியாக நீர் பெருகுங்கழியின் கண்ணே துணையோடு சுறாமீன் இயங்குதலுஞ் செய்யும்; அவ்விடத்தில் இரவில் ஒலிக்கின்ற குளிர்ச்சியையுடைய கடலில் மிக்க விளக்கங்களைக் கொண்டு; எம் சுற்றத்தாரும் மீன்வேட்டையாடச் சென்றுவிட்டனர்; ஆதலால் பொங்குகின்ற பிசிரையும் முழவு போல ஒலித்தலையுமுடைய அலையெழுந்து உடைந்து விழுகின்ற கடற்கரையிலுள்ள நெய்தனிலத்தில்; யாங்கள் உறைதலையுடைய எம் மூரின்கண் இன்றிரவிலே தங்கிச் செல்லின் என்ன குறைபாடுண்டாகுமோ?
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. - பேரி சாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 67. நெய்தல், நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, கரிய, முழவு, மல்கு, கண்ணே, மலர், வெளிய, கால், சங்க, எட்டுத்தொகை, மண்டிலம், கருங், வெண், புன்னை