நற்றிணை - 43. பாலை

துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின் என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன், ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் |
5 |
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே மெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே, அஞ்சல் என்ற இறை கைவிட்டென, பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின், களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் |
10 |
ஓர் எயின் மன்னன் போல, அழிவு வந்தன்றால், ஒழிதல் கேட்டே. |
வெளிய ஆடையை விரித்தாற் போன்ற வெயில் விளங்கிய வெப்பத்தையுடைய கோடை நீடிய மலைப்பக்கத்தில்; நுணுகிய பசியையுடைய செந்நாய் வாடிய மரையாவைக் கொன்று போகட்டு; தின்றொழிந்த மிச்சில்; நெடுந்தூரத்திலுள்ள வேற்று நாட்டினின்று செல்லுதற்கரிய பாலைநிலத்தின்கண்ணே செல்லுகின்ற மாந்தர் உண்ணும் உணவாயிருக்கும்; வெப்பமுற்ற அரிய வழியிலே செல்லுதல் நுமக்கு உடம்பு நிறைவுற்ற மகிழ்ச்சியுடைத் தாயிராநின்றது; இவட்கோவென்றால் நீயிர் பிரிந்து போதலைக் கேட்டவுடன் 'அஞ்சாதே கொள்' என்ற துணைவயின் வந்த அரசன் கைவிட்டானாக; அப்பொழுது பைங்கண்ணையுடைய யானைப் படையையுடைய பகைவேந்தன் தன் மதிற்புறத்து வந்து தங்கலும்; தனக்கு வந்த துன்பத்தைப் போக்குபவரைக் காணாமல் கலக்கமுற்ற உறுப்புக்கள் அமைந்த உடைந்த ஒரு மதிலையுடைய அரசனைப் போல; அழிவு வராநின்றது; ஆதலின் ஏற்றதொன்றனைச் செய்ம்மின்;
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தது. - எயினந்தையார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 43. பாலை, இலக்கியங்கள், பாலை, நற்றிணை, மிச்சில், அழிவு, வந்த, செந்நாய், வெயில், எட்டுத்தொகை, சங்க, நீடிய