நற்றிணை - 396. குறிஞ்சி
பெய்து போகு எழிலி வைகு மலை சேர, தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப, வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள், பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ, கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை |
5 |
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்! நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் யார்க்கு நொந்து உரைக்கோ யானே- பல் நாள் காமர் நனி சொல் சொல்லி, |
10 |
ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே? |
மழையைப் பெய்தொழிந்து செல்லும் மேகமெல்லாம் தாம் முன்ப தங்கியிருந்த மலையின்கண்ணே சென்று தங்காநிற்ப; தேனிறால் தூங்குகின்ற உயர்ந்த வெற்பினின்று அருவி ஆரவாரித்து வீழாநிற்ப; வேங்கைமரங்கள் மலர்ந்த அழகிய மலையில் நல்ல நாட்காலைப் பொழுதிலே பொன்போன்ற பூக்களையுடைய கிளையிலிருந்து அளாவி; நறுமணம் வீசும் மகரந்தத்தில் அளைந்த அழகு பெற்ற மயில்; பசிய கற்பாறையி னுச்சிமீது தன் கூட்டத்தோடு கூடி; ஆதித்தனது மிக்க கதிரையுடைய இளவெயிலைத் துய்க்கின்ற மலைநாடனே!; நினது மார்பினால் வருத்தப் பெற்ற இன்னாமை நீங்குதற்கரிய காமநோயை யான் யாரிடத்து நொந்து கூறாநிற்பேன்?; நீ வந்து புணரும் பல நாளும் மிக இனிய வார்த்தைகளை யான் விரும்பும்படி சொல்லி இங்ஙனம் கூறியவழி நடத்தல் இவட்குக் காப்புடைத்தாகுமென்று அருளாயாய்; நீ மயக்கமுறாநின்றனை; இதனை யான் யார்க்கு நொந்து கூறாநிற்பேன்;
தோழி தலைமகனை வரைவு கடாயது; வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல் லியதூஉம் ஆம்; இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 396. குறிஞ்சி, இலக்கியங்கள், யான், நற்றிணை, குறிஞ்சி, நொந்து, பெற்ற, சொல்லி, வரைவு, கூறாநிற்பேன், யார்க்கு, எட்டுத்தொகை, சங்க, அருவி, நாள், சொல்