நற்றிணை - 387. பாலை
நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும், அம்ம! நாளும் தொல் நலம் சிதைய, ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக் கல்லா மழவர் வில்லிடை விலங்கிய துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர் |
5 |
வருவர் வாழி- தோழி!- செரு இறந்து ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த வேல் கெழு தானைச் செழியன் பாசறை உறை கழி வாளின் மின்னி, உதுக்காண், நெடும் பெருங் குன்றம் முற்றி, |
10 |
கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே. |
தோழி! வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேட்பாயாக; யாவரும் அஞ்சும்படி போர் வென்று தலையாலங்கானத்துச் சென்று தங்கிய வேற்படை பொருந்திய சேனைகளையுடைய பாண்டியன் நெடுஞ்செழியன் தனது பாசறையிலேயிருந்து ; உறையினின்று நீக்கிய வாள் போலமின்னி; உவ்விடத்தே பாராய்; நெடிய பெரிய மலையைச் சூழ்ந்து முழக்கம் மிக்க மேகம்; விரைந்து மழையைப் பெய்யாநின்றது; இப் பருவத்தினை நோக்கியவுடன் வெறுத்தொழிந்த மாலையையுடைய தந்தொழிலன்றிப் பிற கல்லாத வீரர் பயிலாது ஏந்திய செவ்விய அம்பினை வில்லினின்றும் விடுதலானே அஞ்சி யாரும் நெருங்குதற்கரிய குறுக்கிட்ட கவர்த்த வழியையுடைய; சென்று சேர்தற்கியலாத சுரத்தின்கண்ணே முன்பு சென்ற காதலர்; விரைவில் வாராநிற்பர்; அங்ஙனம் அவர் வருதற்குள்ளாக நீ வருத்தமுற்று நெறித்த கரிய கூந்தலினும் நெடிய தோளினும் நாள்தோறும் பழமையாயுள்ள அழகெல்லாவற்றையுங் கெடுத்துக்கொள்ளாதொழிவாய்;
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது. - பொதும்பில் கிழார் மகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 387. பாலை, இலக்கியங்கள், தோழி, நற்றிணை, பாலை, நெடிய, சென்று, கெழு, எட்டுத்தொகை, சங்க