நற்றிணை - 370. மருதம்

வாராய், பாண! நகுகம்- நேரிழை கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி, நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ் விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி, 'புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் |
5 |
திதலை அல்குல் முது பெண்டு ஆகி, துஞ்சுதியோ, மெல் அம் சில் ஓதி?' என, பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி, உள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல, முகை நாண் முறுவல் தோற்றி, |
10 |
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே. |
பாணனே! என்னருகு வருவாயாக!; நேர்மையான கலன்களையுடையாள் என் சுற்றத்தார் சூழ ஓம்புகின்ற சிறந்த சூல் உடையளாய் மகவு ஈன்று நங்குடிக்கு உதவிபுரிந்து; நெய்யுடனே கலந்து ஒளிர்கின்ற சிறுவெண் கடுகாகிய திரண்ட விதைகளை விளங்கும் மாளிகையிடமெங்கும் விளங்கும்படி பூசிப் பாயலிலே படுத்திருந்தாளை; நெருங்கி மெல்லிய அழகிய சிலவாகிய கூந்தலையுடையாய்!; நீ புதல்வனை ஈன்றதனால் வேறு பெயரும் பெற்று அழகிய வரிகளும் தித்தியுமுடைய அல்குலையுடைய முது பெண்டாகித் துயிலாநின்றனையோ? என்று கூறி; பலவாகிய மாட்சிமைப்பட்ட வயிற்றிடத்தில் என் கையிலுள்ள குவளை மலரால் ஒற்றிச் சில பொழுது கருதினேனாகி அங்கு நின்ற என்னை மெல்ல நோக்கி; முல்லையின் நாளரும்பு போன்ற நகையையுந் தோற்றுவித்து; சிறந்த நீலமலர் போன்ற மையுண்ட கண்களைக் கையான் மூடி மகிழ்ச்சி மிகக் கொண்டிருந்தது எனக்கு நகையுடையதா யிராநின்றது; அதனைக் கருதுந் தோறும் நாம் நகாநிற்போம்; அத்தகையாள் இப்பொழுது ஊடியிருப்பது காணாய்!
ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் பாணர்க்குச் சொல்லியது; முன் நிகழ்ந்ததனைப் பாணர்க்குச் சொல்லியதூஉம் ஆம். - உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 370. மருதம், இலக்கியங்கள், மருதம், நற்றிணை, சிறந்த, அழகிய, பாணர்க்குச், மெல்ல, சூல், எட்டுத்தொகை, சங்க, முது, குவளை