நற்றிணை - 367. முல்லை

கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து, கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால் கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் |
5 |
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின் குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத் தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை இளையரும் சூடி வந்தனர்: நமரும் |
10 |
விரி உளை நன் மாக் கடைஇ, பரியாது வருவர், இப் பனி படு நாளே. |
வட்டமாகிய கண்களையும் கூரிய வாயையும் உடைய காக்கைப் பேடை; நடுங்குகின்ற சிறகையுடைய தன் பிள்ளையைத் தழுவிக் கொண்டு; சுற்றத்தையும் விளித்து; கரிய கண்ணையுடைய கருனைக் கிழங்கின் பொரிக் கறியோடு கூடிய செந்நெல் அரிசியாலாக்கிய வெளிய சோற்றுத் திரளையைத் தெய்வத்துக்கிடும் பலியுடனே கவர்ந்து கொள்ளுமாறு; குறிய கால் நாட்டிக் கட்டிய மிக்க உணவையுடைய நல்ல மனையின்கண்ணே கூடினவாயிருக்கும்; பழைமையான வீடுகளையுடைய அருமன் என்பவனது பெரிய புகழ் பொருந்திய சிறுகுடி என்னும் ஊரிலிராநின்ற; மெத்தென்ற சாயலையுடைய அரிவையே!; நினது பலவாகிய கரிய கூந்தலிற் சூடிய மாலை போலக் குவளை மலரொடு இடையிட்டுத் தொடுத்த நறிய பூவையுடைய முல்லையின் மூட்டுவாய் அவிழ்ந்த மலராகிய; தண்ணிய நன்மணமுடைய பூமாலையை; உடன் சென்றிருந்த வீரரெல்லாருஞ் சூடி வந்தனர்; அதனால் இப் பனி மிக்க பருவத்திலேதானே நங்காதலரும் ஆண்டுத் தங்கி வருந்தாது; விரிந்த பிடரிமயிரையுடைய நல்ல குதிரையைச் செலுத்திக் கொண்டு இன்னே வருகுவர்; ஆதலின் வருந்தாதே கொள்!
வரவு மலிந்தது. - நக்கீரர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 367. முல்லை, இலக்கியங்கள், நற்றிணை, முல்லை, சூடி, வந்தனர், கொண்டு, கரிய, நல்ல, மிக்க, தொடுத்த, அருமன், சங்க, எட்டுத்தொகை, பேடை, செந்நெல், கால், சிறுகுடி