நற்றிணை - 362. பாலை
வினை அமை பாவையின் இயலி, நுந்தை மனை வரை இறந்து வந்தனை; ஆயின், தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும், |
5 |
நீ விளையாடுக சிறிதே; யானே, மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி, அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்; நுமர் வரின், மறைகுவென்- மாஅயோளே! |
10 |
கரிய மாமைநிறமுடைய காதலியே!; இயந்திரமமைந்த கொல்லிப் பாவைபோல இயங்கா நின்று; நின் தந்தையின் மனையெல்லையைக் கடந்து யான் கூறுகின்ற சொற்களை மேற்கொண்டு என்னொடு போந்தனை; ஆதலால்; முதற் பெயலைப் பெய்யத் தொடங்கிய குளிர்ச்சியான மழையையுடைய மேகம் பெய்தலாலே அழகு மிக்க காட்டில்; அகன்ற மேலிடமெல்லாம் பரவிய விரைந்த செலவினையுடைய சிவந்த ஈயலின் மூதாயை நோக்கியும் அவற்றைப் பிடித்தும் சிறிது பொழுது நீ விளையாடுவாயாக!; யானோவெனில், இளைய களிற்றியானை யுரிஞ்சிய பருத்த அடியை உடைய வேங்கை மரத்தின் மணற் பரப்பினையுடைய அதன் பெரிய பின்புறத்தில் மறைந்திருந்து; ஆறலைகள்வர் முதலாயினோர் சூழ்ந்து போர் செய்ய வரின் அஞ்சாது போர் புரிந்து அவர் ஓடுமாறு பெயர்க்குவேன்; அவ்வண்ணம் நின் சுற்றத்தார் தேடி நின்பின்னே தொடர்ந்துவரின் மறைந்துகொள்ளா நிற்பேன்காண்!
உடன்போகாநின்ற தலைமகன், தலைமகட்குச் சொல்லியது. - மதுரை மருதன் இள நாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 362. பாலை, இலக்கியங்கள், வரின், நற்றிணை, பாலை, நின், போர், புறம், எட்டுத்தொகை, சங்க, வேங்கை