நற்றிணை - 361. முல்லை
சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்; விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா, படு மழை பொழிந்த தண் நறும் புறவில், நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப, |
5 |
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த் தந்தன நெடுந்தகை தேரே; என்றும் அரும் படர் அகல நீக்கி, விருந்து அயர் விருப்பினள், திருந்துஇழையோளே. |
சிறிய மலரையுடைய முல்லையினது பெரிதும் மணம் வீசுகின்ற மலரை; நெடிய புகழையுடைய இறைவன் தானுஞ் சூடினன் உடன் வந்த இளைஞரும் சூடினர்; விசும்பைக் கடந்தாலொத்த பொன்னால் ஆகிய கலனை அணிந்த கனைக்கின்ற குதிரைகள்; மிக்க மழை பொழிந்த தண்ணிய நறிய காட்டில் நெடிய நாவையுடைய ஒள்ளிய மணியோசை மிக்கு ஒலிப்ப; அவனது தேரை மாலைப் பொழுது மயங்கிய மணல்மிக்க அகன்ற மாளிகை வாயிலிலே கொணர்ந்து நிறுத்தின; திருந்திய கலனணிந்த தலைவி தான் முன்பு எந்நாளுங் கொண்டிருந்த தீர்தற்கரிய துன்பமெல்லாம் ஒருங்கே நீங்கி; இறைமகனுக்கு விருந்தயரும் விருப்பத்தையுடையளா யிராநின்றனள்; ஆதலின் அவள் துனிகூருமென்று நீயிர் கவல வேண்டா?
வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது. - மதுரைப் பேராலவாயர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 361. முல்லை, இலக்கியங்கள், நற்றிணை, முல்லை, மணம், நெடிய, பொழிந்த, சூடினன், எட்டுத்தொகை, சங்க, இளைஞரும்