நற்றிணை - 352. பாலை
இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய அன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன் வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை, அழல் போல் செவிய சேவல் ஆட்டி, நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி |
5 |
பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று, தேர் திகழ் வறும் புலம் துழைஇ, நீர் நயந்து, பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ அருஞ் சுரக் கவலை வருதலின், வருந்திய நமக்கும் அரிய ஆயின: அமைத் தோள் |
10 |
மாண்புடைக் குறுமகள் நீங்கி, யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே! |
இலைவடிவாகிய மாட்சிமைப்பட்ட அம்பை வில்லிலே மாண்புபட இருத்திய உயிர்களிடத்து அன்பில்லாத மறவர்; கொன்று அலைத்தலாலே; அயல் நாட்டினர் பலரும் அவ்விடத்தில் இறந்து கிடந்த செல்லுதற்கரிய சுரத்திலுள்ள கவர்த்த நெறியில் அங்ஙனம் கிடந்த பிணங்களை; அழல் போலுகின்ற சிவந்த செவியையுடைய கழுகின் சேவல் தின்னாவாறு அதனை வெருட்டி அலைத்து; தன் நிழலைப் பார்த்து மகிழ்ந்து விளையாடுகின்ற ஊனைத் தின்னுதலில் விருப்ப மிக்க முதிய நரி; பசிய தசையை நிரம்பத் தின்று வாய் வறந்து நீர் பருக விரும்பிப் பேய்த்தேர் விளங்குகின்ற நீரற்ற வறும் புலத்தை நீர் உள்ள இடமென்று சென்று அலைந்து; நீர் ஆங்குக் கிடைக்காமையாலே வருந்திக் கற்குவியலின் நிழலிலேதான் வெயிலுக்கு ஒதுங்கியிருக்கவும் இடம்பெறாது வருந்துகின்ற அஞ்சத்தக்க பலவாய வழி; வருதலானே வருந்திய நமக்கும் கடத்தற்கு அரிய வாயின; இத்தன்மையவாகிய வழியில் மூங்கில் போன்ற தோளையுடைய மாட்சிமைப்பட்ட இளமடந்தையாகிய நம் காதலி தானிருக்கும் மாளிகையினின்று நீங்கி எவ்வாறு வந்தனளோ?: அளியள் இவள் இரங்கத் தக்காள் காண்;
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது. - மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 352. பாலை, இலக்கியங்கள், நீர், பாலை, நற்றிணை, நமக்கும், அரிய, அளியள், கிடந்த, மாட்சிமைப்பட்ட, வருந்திய, நீங்கி, சேவல், சங்க, எட்டுத்தொகை, மாண், கவலை, அழல், வறும்