நற்றிணை - 351. குறிஞ்சி
'இளமை தீர்ந்தனள் இவள்' என வள மனை அருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய்; பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி- வேண்டு, அன்னை!- கருந் தாள் |
5 |
வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து, சிறு தினை வியன் புனம் காப்பின், பெறுகுவள்மன்னோ என் தோழி தன் நலனே. |
அன்னாய்! வாழ்வாயாக! யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக!; இவள் பெதும்பைப் பருவம் நீங்கப் பெற்றவளென்று; வளம் பொருந்திய மாளிகையிலே பெயர்ந்து போதற்கரிய காவலுட்படுத்தினையாயினும்; சிறந்த இவள் பசப்படைந்தனள் என்பதனை உணர்ந்தனை யல்லையாய்; பல நாளும் துன்பம் பொருந்திய நெஞ்சத்துடனே முருகவேளை விரும்பி இல்லகத் தழைத்து வெறிக்களந் திருத்தி வெறியெடுத்து வருந்தாதே கொள்; கரிய அடியையுடைய வேங்கை மரங்கள் நிரம்பிய சிறிய குன்றினிடத்திலே; சந்தனமரத்தாற் செய்த களிற்றியானையின் வலிமைக்கு அஞ்சாத புலித் தோலால் வேய்ந்த கட்டுப் பரணிடத்திலே தங்கியிருந்து; சிறிய தினைகளையுடைய அகன்ற புனத்தை மறுபடியுஞ் சென்று பாதுகாத்திருப்பாளாயின்; என் தோழி தன் அழகை மீண்டும் பெறாநிற்பள், அது வீணே கழிகின்றது!;
தோழி அருகு அடுத்தது. - மதுரைக் கண்ணத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 351. குறிஞ்சி , இவள், இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, நற்றிணை, சிறிய, பொருந்திய, சங்க, செய்த, எட்டுத்தொகை