நற்றிணை - 310. மருதம்
விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை, களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க, உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர் வாளை பிறழும் ஊரற்கு, நாளை மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! |
5 |
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன் சொல்லலைகொல்லோ நீயே- வல்லை, களிறு பெறு வல்சிப் பாணன் கையதை வள் உயிர்த் தண்ணுமை போல, |
10 |
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே? |
விளக்கைப் போன்ற ஒளி விடுகின்ற மலர் பொருந்திய தாமரையினுடைய களிற்றி யானையின் செவியைப் போன்ற பசிய இலை அலைபட; நீர் பருகுந் துறையின்கண் இறங்கிய மாதர்கள் அஞ்சி ஓட ஆழமாகிய நீர் மிக்க பொய்கையில் வாளைமீன் வெடிபாயும் ஊரனுக்கு; இனி வருகின்ற அடுத்த நாளைக்கும் ஒரு பரத்தையைக் கொணர்ந்து கொடுத்தற்கு நேர்ந்த அறியாமையுடைய விறலியே!; மெய்ம்மையே கல்லாதொழிந்த நாவினால் குலைந்த தாழ்மையுடைய நின் சொல்லுக்குடன்பட்ட அப் பரத்தையரின் தாய்மாருடன் ஒருசார் எய்தி; நீ தான் விரைவாக ஆவின் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணன் கையிடத்ததாகிய பெரிதாக ஒலித்தலையுடைய தண்ணுமை வாச்சியம்போல; உள்ளே யாதுமில்லாத ஒரு மேற் போர்வையுடைய சொற்களை; சொல்லுகின்றிலையோ? அங்ஙனம் சொல்லி அவரையும் பிறர் முயங்குமாறு விடுக்கலாமன்றோ?
வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம். - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 310. மருதம், இலக்கியங்கள், நீர், நற்றிணை, மருதம், தண்ணுமை, பாணன், எட்டுத்தொகை, அன்ன, சங்க