நற்றிணை - 288. குறிஞ்சி
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப் பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் குன்ற நாடன் பிரிவின் சென்று, நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை |
5 |
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ, கட்டின் கேட்கும்ஆயின், வெற்பில் ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற் சிறு கிளி கடிகம் சென்றும், 'இந் நெடு வேள் அணங்கிற்று' என்னும்கொல் அதுவே? |
10 |
உயர்ந்த மரக்கிளையிலுள்ள பீலியையுடைய மயில் காலையில் விரிந்த இளவெயில் காயவேண்டி அருவியொலிக்கின்ற அச்சமுடைய நெடிய கொடுமுடியின் பக்கத்திலே; தன் பெடையோடு விளையாடாநிற்கும் மலைநாடன் நம்மைப் பிரிதலினாலே சென்று; நல்ல நினது நுதலிலே பரந்த பசலையை நோக்கி நம் அன்னை சேரியிலுள்ள செம்மையாகிய முதுமையுடைய கட்டுவிச்சி முதலாயினோருடனே இல்லகம் புகுந்து; முன்னர் முறத்தில் நெல்லைப் பரப்பிக் கட்டுவைத்து நம்மை எதிரில் நிறுத்திக் குறிகேட்குமாயின்; அக்கட்டுக் குறியானது இப்பொழுது மலையிடத்தில் உள்ள ஏனலாகிய சிவந்த தினையின் பால் நிரம்பிய கொழுவிய கதிர்களைக் கொய்துகொண்டு போகுங் கிளிகளை வெருட்டுவேமாகிச் சென்றிருந்தும் அதனையறியாது; இவள் இந்நெடிய முருகவே ளிருக்குமிடத்து அருகு சென்றதனால் முருகவேள் அணங்கியதென்று கூறாநிற்குமோ?
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது. - குளம்பனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 288. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, அன்னை, பால், பரந்த, பெடையோடு, எட்டுத்தொகை, சங்க, சென்று