நற்றிணை - 241. பாலை
உள்ளார்கொல்லோ- தோழி!- கொடுஞ் சிறைப் புள் அடி பொறித்த வரியுடைத் தலைய நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற, வளரா வாடை உளர்பு நனி தீண்டலின், வேழ வெண் பூ விரிவன பலவுடன், |
5 |
வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய, மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய, எல்லை போகிய பொழுதின் எல் உற, பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து, |
10 |
பல் இதழ் உண்கண் கலுழ, நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே? |
தோழீ! வளைந்த சிறகையுடைய பறவைகளின் உள்ளங்காற் சுவடு பொருந்திய வரிகளை மேற்கொண்டுள்ள நீர்வற்றிய இடங்கள் தோறும்; மெல்லிய நுண்மணல் தோன்றாநிற்ப; மெல்லென வீசும் வாடைக்காற்று உளர்ந்து மிகவும் தீண்டுதலினாலே; கரும்பின் வெளிய பூப் பலவும் ஒருசேர விரிவனவாய் அரசனுக்கு வீசப்படும் கவரிபோல மெல்லிய புதல்தோறும் அழகு செய்யா நிற்ப; மேகங்கள் நீங்கிச் செல்லுகின்ற ஆகாயத்தில் மாறி மாறி விழித்து மூடி இமைப்பதுபோல் ஞாயிறு தோன்றித் தோன்றி மறையாநிற்ப; பகற்காலஞ் சென்ற மாலைப் பொழுதோடு இராக்காலம் வந்து சேர்தலும்; பனி நிலத்தில் விழத்தொடங்கிய துன்பத்தைத் தருகின்ற நடு யாமத்தில்; இமையையுடைய மையுண்ட கண்கள் நீர் பெருகி வடியும்படி அழாநிற்ப; நிலைநில்லாத பொருளை ஈட்டுதலில் உள்ளம் பிணிப்புண்டு எம்மைப் பிரிந்து சென்ற காதலர்; இப்பொழுது யாம் படுந்துயரைக் கருதினாரேல், புரையேறல் தும்மல் முதலியவற்றால் அறிந்து இனி அவர் வருவர் போலுமென ஆற்றியிருப்பேமன்றோ? அங்ஙனம் இன்மையால் கருதியிருப்பாரல்லரோ?
தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது. - மதுரைப் பெருமருதனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 241. பாலை, இலக்கியங்கள், பாலை, நற்றிணை, மாறி, மெல்லிய, சென்ற, விழித்து, நீர், எட்டுத்தொகை, சங்க, ஞாயிறு