நற்றிணை - 235. நெய்தல்
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல், அரவு வாள் வாய முள் இலைத் தாழை பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம் மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும், |
5 |
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி, கண்டனம் வருகம் சென்மோ- தோழி!- தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத, படு மணிக் கலி மாக் கடைஇ, நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே. |
10 |
தோழீ! வலிய அலைவந்து மோதிய சருச்சரை பொருந்திய வளைந்த அடியையுடைய அராவுகின்ற வாளரம் போன்ற வாயையுடைய முட்கள் பொருந்திய இலைமிக்க தாழையின்கணுள்ள பூ; பொன் போன்ற மகரந்தத்தையுடைய புன்னைமலரொடு சேர்ந்து மணங்கமழாநிற்கும் இன்னும் பலவாகிய மலர்களையுடைய சோலையில் வைத்த; குறியிடத்திலே பகற் பொழுது வந்து நலனுகர்ந்து நம்முடைய உடம்பின் அழகு கெடும்படியாகப் பெயர்ந்து போயினனாயினும்; தண்ணிய மாலை அணிந்த மார்பின்கண் வண்டுகள் வந்தொலித்து அம்மாலையின் தேனை உண்ணாநிற்ப; ஒலிக்கின்ற மணியணிந்த குதிரைகளைச் செலுத்தி; நெடிய நீரையுடைய நெய்தனிலத்திற்குத் தலைவனாகிய நம்காதலன் வரைவொடு வருகின்றதனை; யாம் சென்று குன்றுபோலத் தோன்றுகின்ற குவிந்த மணலாலாகிய திடர்மீது, ஏறிநின்று கண்டு வருவோம் அதற்காகச் செல்வோமோ? ஒன்று கூறிக்காண்;
வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 235. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், பொருந்திய, வரைவு, தோழி, பொன், எட்டுத்தொகை, சங்க, வந்து