நற்றிணை - 184. பாலை
ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும் செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்; 'இனியே, தாங்கு நின் அவலம்' என்றிர்; அது மற்று யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! |
5 |
உள்ளின் உள்ளம் வேமே- உண்கண் மணி வாழ் பாவை நடை கற்றன்ன என் அணி இயற் குறுமகள் ஆடிய மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே. |
அறிவுடைய அயலிலாட்டியரே ! நுங்களைப் போல பல புதல்வியரைப் பெற்றேனில்லை, யான் ஒரோவொரு புதல்வியையே பெற்றுடையேன்; அவளும் போரின் மிக்க வலிமையும் கூரிய வேற்படையையுமுடைய காளையாவான் ஒருவனொடு நெருநலிரவு பெரிய மலையின்கணுள்ள சென்று சேர்தல் அரிதாகிய சுரநெறியே சென்றொழிந்தனள் கண்டீர்; அங்ஙனம் அவள் போயொழிதலானே அவள் பால் யான் கொண்டிருந்த அவாவும் நீங்கியது ஆயினும்; வேறு புதல்வியரோடு மகிழ்ந்துறையும் பயனெய்திலேனாகலின் அவளொடு பழகியதே காரணமாக இன்று வருந்தும் என்னை நீயிர் இனி நின் அவலத்தை அடக்கிகொள்ளெனக் கூறாநின்றீர்; அதனை அடக்கிக்கொள்ளுதல் எவ்வாறியலும்கொல்?; மையுண்ட கண்ணின் மணியூடு வாழும் பாவை வெளிவந்து நடைபயின்று நடந்தாலன்ன என் அழகிய சாயலையுடைய இளமகள் விளையாடிய; நீல மணிபோன்ற பூவையுடைய நொச்சியையும் திண்ணையையும் நோக்கி நினைந்தால்; அவ்வண்ணம் கருதும் உள்ளமும் வெந்தழியுமன்றே, இனி யான் எவ்வாறு உய்குவேன்?
மனை மருட்சி
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 184. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, யான், அவள், பாவை, அவளும், எட்டுத்தொகை, சங்க, நின்