நற்றிணை - 182. குறிஞ்சி
நிலவும் மறைந்தன்று; இருளும் பட்டன்று; ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின், பாவை அன்ன நிற் புறங்காக்கும் சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்; கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு, |
5 |
நன் மார்பு அடைய முயங்கி, மென்மெல, கண்டனம் வருகம் சென்மோ?- தோழி!- கீழும் மேலும் காப்போர் நீத்த வறுந் தலைப் பெருங் களிறு போல, தமியன் வந்தோன், பனியலை நீயே! |
10 |
தோழீ ! நிலாவும் மறைந்தொழிந்தது, இருளும் வந்து பொருந்தியது; சித்திரத்திலமைந்தாலொத்த அகன்ற இடத்தையுடைய வீட்டின் எல்லையிலே பாவைபோன்ற நம்மைப் பாதுகாக்கின்ற; சிறந்த மேம்பாட்டினையுடைய அன்னையுந் துயிலா நின்றனள்; தறியிலே பிணித்துக் காப்பவரும் மீதேறி நடத்துபவரு மொழிந்த சிறிய தலையையுடைய பெரிய களிற்றுயானைபோல; தனியாக வந்த தலைவனது பனியலைத்தலானே கலக்குண்ட நிலையைச் சென்று நோக்கி; கையிலிருந்து தவறுண்டு விழுந்து இழந்து போகிய நல்ல அணிகலனை மீட்டும் கண்டெடுத்தாற்போல நம்மை இற்செறித்தலான் அடையப்படாதிருந்த; அவனுடைய நல்ல மார்பைச் சேரப்புல்லி மகிழ்ந்திருந்து அவனைப் பலகாலும் செவ்விதாக நோக்கிப் பின்னர் மெல்ல மெல்ல வருவமோ? ஆராய்ந்து கூறுவாயாக !
வரைவு நீட்டிப்ப, தலைமகள் ஆற்றாமை அறிந்த தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவு கடாயது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 182. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, நற்றிணை, நல்ல, மெல்ல, வரைவு, தோழி, இருளும், எட்டுத்தொகை, சங்க, அன்ன, சிறந்த